கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொருளியல் பாதிப்பை குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்திருப்பதாக துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.
இந்த நடவடிக்கையால் உள்ளூர் வேலையின்மை விகிதத்தின் அதிகரிப்பு கிட்டத்தட்ட 1.7 விழுக்காடு குறையலாம் என்று திரு ஹெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில் வேலை இழப்பு நேர்ந்தாலும் இந்த இரண்டு ஆண்டுகளுக்குக் கிட்டத்தட்ட 155,000 வேலைகள் காப்பாற்றப்படலாம். இதில் பாதிக்கு மேற்பட்ட வேலைகள் ஜேஎஸ்எஸ் எனப்படும் வேலைகள் ஆதரவுத் திட்டத்தால் காப்பாற்றப்படும் என்றார்.
இவ்வாண்டின் பொருளியல் 5.6 விழுக்காடு சுருங்குவதையும் அடுத்த ஆண்டின் பொருளியல் 4.8 விழுக்காடு சுருங்குவதையும் அரசாங்கத்தின் கடந்த நான்கு வரவு செலவுத் திட்டங்கள் ஒட்டுமொத்தமாகத் தடுக்கும் என்று சிங்கப்பூர் நணய ஆணையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவலைக் கையாள சிங்கப்பூரின் நான்கு வரவு செலவுத் திட்டங்கள் மொத்தத்தில் 100 பில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இவற்றுடன் கடன்காரர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் சிறப்பு நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.