அனைவரும் கவனமாகவும் விழிப்புடனும் நடந்துகொண்டு ஒத்துழைக்கும் பட்சத் தில் ஐவருக்கு மேல் ஒன்றுகூட அனுமதிப்பது உட்பட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து இருக்கிறார்.
அப்படி 'ஐவர் வரம்பு' விதி தளர்த்தப்படும் பட்சத்தில் பெரிய குடும்பங்கள் அல்லது நண்பர்கள் குழு ஒன்றாகச் சந்திக்கவும் உணவருந்தவும் முடியும்.
"குறிப்பாக, ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது குறித்துக் கவலைப்படுகிறோம். சாப்பிடவும் பானமருந்தவும் முகக்கவசத்தைக் கழற்ற வேண்டும். அவ்வேளையில் பேசவும் முற்படுவோம். அதனால், முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றும் நடவடிக்கைகளைக் காட்டிலும் ஒன்றாக உணவருந்தும்போது கொவிட்-19 தொற்றும் அபாயம் அதிகம்," என்று அமைச்சர் கான் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியபோது குறிப்பிட்டார்.
பொருளியல், சமூக நடவடிக்கைகளைப் பழைய நிலைக்குக் கொண்டு வர ஏற்கெனவே பல பெரிய நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்திருப்பதை அவர் சுட்டினார்.
கடந்த மாதம் 28ஆம் தேதியில் இருந்து அதிகமான ஊழியர்கள் பணியிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநாடு, கருத்தரங்கு போன்ற வேலை சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்.
அதுபோல, திருமணம், சமய நிகழ்வுகளில் நூறு பேர் வரை கலந்துகொள்ளலாம்.
இருப்பினும், மற்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதால் சமூக நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெற அனுமதிப்பதில் அதிகாரிகள் இங்கு கவனமாக இருந்து வருகின்றனர் என்று திரு கான் குறிப்பிட்டார்.
"கட்டுப்பாடுகள் முன்கூட்டியே அல்லது அவசர அவசரமாகத் தளர்த்தப்படும் பட்சத்தில் கொரோனா தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கலாம். இதனால் மீண்டும் சில கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படலாம். நீண்டகாலத்திற்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடியாது. அப்படிச் செய்வது நமது பொருளியலிலும் வாழ்க்கையிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும்," என்று அமைச்சர் விளக்கினார்.
சமூகத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறைவாக இருப்பது தற்செயலானது அல்ல எனக் கூறிய அவர், நமது கூட்டுமுயற்சியாலும் கடின உழைப்பாலும் அர்ப்பணிப்புகளாலும் அது சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மேலும் பல நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் திட்டங்கள் தயாரானதும் அவை குறித்த விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

