சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு உலகிலேயே ஆகச் சிறந்தது என்று அமெரிக்காவை சேர்ந்த பயணத்துறை இணையப் பக்கமான 'ஃபார் & வைட்' தெரிவித்துள்ளது. ஹாங்காங், லண்டன் போன்ற உலகின் மற்ற பெருநகரங்களை சிங்கப்பூர் முந்திவிட்டது.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மனநிறைவு அடைவது, கட்டுப்படியான பயணக் கட்டணங்கள் போன்ற அம்சங்களை அது சுட்டியது. சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு பேருந்து, ரயில்களில் வரையறை அற்ற பயணம் மேற்கொள்வதற்கு சுற்றுப்பயணிகள் $10 செலுத்துகின்றனர். சுற்றுப்பயணிகளுக்கான இதுபோன்ற பயண அட்டைகளுக்கு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் $13ம் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் $22ம் கட்டணம் விதிக்கப்படுகிறது.
ஹாங்காங்கில் சுற்றுப்பயணிகளுக்கான பயண அட்டைகளுக்கு நாள் ஒன்றுக்கு $10 கட்டணம் விதிக்கப்படுகிறது. ஆனால், மூன்று முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான பயண அட்டைகளுக்கு $5 கட்டணம் விதிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் 0.9 மீட்டருக்கும் அதற்கும் குறைவான உயரமுடைய சிறுவர்கள் பொதுப் போக்குவரத்தில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். ஆகச் சிறந்த பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பைக் கொண்ட நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் வகித்ததாக 2018ல் ஆய்வு நிறுவனமான 'மெக்கின்சி' நடத்திய அனைத்துலக ஆய்வு ஒன்றில் தெரிய வந்ததை 'ஃபார் & வைட்' சுட்டியது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 86 விழுக்காட்டினர், சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதில் மனநிறைவு கொண்டிருந்தனர். முன்னணியில் இருக்கும் 10 நகரங்களிலேயே இதுதான ஆக அதிக விழுக்காடு.
பல அம்சங்களில் தொழில்நுட்ப வசதிகள் உடைய சிங்கப்பூர் மீது சுற்றுப்பயணிகளுக்கு அதிக எதிர்பார்ப்புகள் கொண்டிருப்பதாக 'ஃபார் & வைட்' குறிப்பிட்டது.
எம்ஆர்டி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேலும் உயர்த்த பெரியளவிலான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதை அந்த நிறுவனம் சுட்டியது. பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு மேற்கு ரயில் தடங்களில் சேவையில் விடுவதற்கு 40 புதிய ரயில்களைத் தான் வாங்கியுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.
புதிய ரயில்களின் முதல் தொகுதி, 2024ஆம் ஆண்டிலிருந்து சேவைக்கு விடப்படும்.

