கொவிட்-19 நோய்ப் பரவல் கட்டுப் பாடுகள் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மூன்றாம் கட்டத் திறப்பு எப்போது என்பது உள்ளிட்ட விவரங்களை அமைச்சுகள்நிலை பணிக்குழு வரும் வாரங்களில் வெளியிடும் என துணைப் பிரதமர் ஹெங் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்டத் திறப்பிற்கான எதிர்பார்க்கப்படும் கால வரையறை, குழு ஒன்றுகூடல்களில் எத்தனை பேர் இடம்பெறலாம் என்ற நிபந்தனைகளில் மாற்றங்கள், அதிகமானோர் கூடும் நிகழ்வுகளில் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் அதில் இடம்பெறும்.
“கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் இப்போது நிலையாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும். நிச்சயமில்லாச் சூழல்களுக்கு இடையே, கொரோனாவுடன் இணைந்து வாழும் வகையில் நாம் மாறி வருகிறோம்,” என்று திரு ஹெங் சொன்னார்.
வரும் மாதங்களில் மேலும் பல நடவடிக்கைகளைப் பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, கிருமித்தொற்றுக்கு எதிராக சிறந்த முறையில் போரிட சிங்கப்பூர் நான்குமுனை உத்திகளைக் கையாண்டு வருவதாக துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
செயலாற்றல்மிக்க தடுப்பூசிகளைக் கூடிய விரைவில் கைக்கொள்ளுதல், பரிசோதனைச் செயல்திறன்களை மேம்படுத்துதல், தடமறிதலையும் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதையும் துரிதப்படுத்துதல், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்தல் ஆகியவையே அந்நான்கு உத்திகள்.
பாதுகாப்பான, செயல்திறன்மிக்க தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில், அவற்றை விரைந்து பெறும் நோக்கில் சிங்கப்பூர் துடிப்புடன் பணியாற்றி வருவதாக திரு ஹெங் குறிப்பிட்டார்.
கொரோனா பரிசோதனைகளைப் பொறுத்தமட்டில், ‘பிசிஆர்’ சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, நாளுக்கு 40,000 ஆய்வகப் பரிசோதனைகள் என்ற இலக்கை நெருங்கிவிட்டதாக அவர் சொன்னார்.
கிருமி தொற்றியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை விரைந்து கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று துணைப் பிரதமர் கூறினார்.
“நமது தடமறியும் குழுவினர் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். மின்னிலக்கக் கருவிகளையும் அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். டிரேஸ்டுகெதர் செயலி, நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வரும் தடமறிதல் கருவிகள், சேஃப்என்ட்ரி திட்டம் ஆகியவை விரைந்து தடமறிய கைகொடுத்து வருகின்றன,” என்றார் அவர்.
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய திரு ஹெங், “நமது பொருளியலை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்குச் சமூகத்தில் கிருமிப் பரவலைக் குறைவாக வைத்திருப்பது முக்கியம்,” என்றும் குறிப்பிட்டார்.