சிங்கப்பூரைவிட குறைவான கொவிட்-19 பாதிப்பு விகிதம், விரிவான பொதுச் சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு கொண்டுள்ள பாதுகாப்பான நாடுகள், வட்டாரங்களுடன் ‘ஏர் டிராவல் பபள்’ எனப்படும் விமானப் பயணச் சேவையைத் தொடங்க சிங்கப்பூர் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். இந்த ஏற்பாட்டின்படி, சிங்கப்பூருக்கு அல்லது சிங்கப்பூரிலிருந்து பயணம் செய்வோர் கட்டுப்படுத்தப்பட்ட பயண நிரலைப் பின்பற்ற வேண்டியிருக்காது.
வர்த்தகம், அலுவல் ரீதியான பயணிகளுக்கான 'பச்சைத்' தடத்திலிருந்து இது மாறுபட்டது.
இந்தப் புதிய பயண ஏற்பாட்டால் ஏற்படும் அபாயத்தை நிர்வகிக்கும் பொருட்டு, தினசரி பயணிகளின் எண்ணிக்கை வரம்பு, அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை போன்றவை நடப்புக்குக் கொண்டுவரப்படலாம் என இன்று (அக்டோபர் 6) வெளியிட்ட அமைச்சர்நிலை அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இத்தகைய பயண ஏற்பாடுகளுக்கு ஹாங்காங் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பயணத் துறையை மேம்படுத்துவதன் பொருட்டு, நாடுகளுக்கிடையிலான எல்லைகளை திறந்துவிடுவதன் தொடர்பிலான மற்ற திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.
வர்த்தகம், அலுவல் ரீதியில் நாடுகளுக்கிடையிலான ‘பச்சைத் தட’ ஏற்பாடு, சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வதற்குத் தொடரும் அனுமதி, பாதுகாப்பான நாடுகள், வட்டாரங்களுடன் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் ஆகியன அவை.