சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்திற்கு 0.4 விழுக்காடு உயர்ந்து 4.5 விழுக்காட்டை எட்டியதாக இன்று வெளியிடப்பட்ட மனிதவள அமைச்சின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
ஜூலை மாதத்தின்போது ஏற்பட்ட 0.3 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டிலும் இது கூடுதலாக உள்ளது. அப்போது சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் 4.1 விழுக்காடு உயர்ந்தது. முன்னைய பொருளியல் மந்தநிலை காலக்கட்டத்தின்போது நிலவிய வேலையின்மை விகிதங்களைக் காட்டிலும் தற்போது உள்ள மாதாந்திர விகிதம் குறைவுதான். ஆயினும் அவை மாதத்திற்கு மாதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
2003ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் கிருமிப்பரவலின்போது வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 6.2 விழுக்காடாக இருந்தது. அனைத்துலக பொருளியல் நிதி நெருக்கடி நேரத்தில் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் இந்த விகிதம் 4.9 விழுக்காடு.
“வேலையின்மை விகிதம் அடுத்த சில மாதங்களுக்கு இப்படியே இருக்குமா அல்லது வேகம் அடையுமா என்பதை இப்போது எங்களால் சொல்ல முடியாது,” என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருக்கிறார்.