மேற்கு லண்டனில் உள்ள வீடு ஒன்றில் மலேசிய இந்திய பெண்ணும் அவரது மூன்று வயது ஆண் குழந்தையும் மாண்டு கிடக்கக் காணப்பட்டனர். அந்தப் பெண் பூர்ணா காமேஸ்வரி சிவராஜ், 36, என்றும் குழந்தையின் பெயர் கைலாஷ் குகராஜ் என்றும் அடையாளம் காணப்பட்டனர்.
பிரன்ட்ஃபோர்ட் பகுதியில் உள்ள அந்த வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த போலிசார் அங்கு இரு சடலங்களுடன் ஆடவர் ஒருவர் கத்திக்குத்து காயங்களோடு இருந்ததை அவர்கள் கண்டதாக பிபிசி கூறியது. குகராஜ் சிதம்பரநாதன், 42, என்று அடையாளம் காணப்பட்ட அவர் பின்னர் மருத்துவமனையில் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
பூர்ணாவுக்கு ஏதோ ஆகிவிட்ட தாக அவர் மீது அக்கறை கொண்ட ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தொலை பேசியில் கூறியதாக போலிசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை அதிகாலை முதல் பூர்ணாவின் வீட்டுக்குப் பலமுறை அதிகாரிகள் சென்றபோதும் அங்கிருந்து எந்தத் தகவலும் அவர்களுக்குக் கிட்டவில்லை. பின்னர் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு வாக்கில் பலவந்தமாக அதிகாரிகள் அந்த வீட்டினுள் நுழைந்தனர்.
தம்பதியர் இருவரும் மலேசியர்கள் என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு கோலாலம்பூரில் அவர்களின் திருமணம் நடைபெற்றது என்றும் அதிகாரிகள் கூறினர்.
புதிதாகக் கட்டப்பட்ட அடுக்கு வீட்டில் குடித்தனம் நடத்தி வந்த அவ்விருவருக்கும் இடையில் அண்மை மாதங்களாக வாக்குவாதம் நடைபெற்றதாக அண்டை வீட்டார் கூறினர். சில சமயங்களில் அலறலும் கூச்சலும் அந்த வீட்டிலிருந்து வந்தததாக சிலர் கூறினர்.
குறிப்பாக, கொரோனா காரணமாக முடக்கநிலை நடப்பில் இருந்தபோது கணவன், மனைவி இடையே பூசல் ஏற்பட்டாக ஒரு குடியிருப்பாளர் கூறினார். பெண்ணும் அவரது குழந்தையும் மாண்டு சில நாட்களாகி இருக்கும் என்றும் அவ்விருவரையும் கொன்றுவிட்டு தம்மைத் தாமே ஆடவர் மாய்த்துக்கொண்டதாகவும் போலிசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் ஓர் அதிர்ச்சியாக, அந்தக் குடும்பத்தின் செல்லப் பிராணியான நாயும் ரத்தவெள்ளத்தில் மாண்டு கிடந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
கொலை என்று இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக துப்பறியும் போலிஸ் பிரிவின் தலைமை ஆய்வாளர் சைமன் ஹார்டிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
செப்டம்பர் 21ஆம் தேதி தமது குழந்தையுடன் பூர்ணா சென்றதைக் கண்டதாக சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்களை யாரும் பார்க்கவில்லை என அதிகாரிகள் கூறியதாக பிபிசி செய்தி குறிப்பிட்டது. மாண்ட தம்பதி மிகவும் நட்பாகப் பழகக்கூடியவர்கள் என்றும் நாயுடன் அவர்கள் உலா செல்வதை அவ்வப்போது கண்டதாகவும் ஸ்ரீதீபா என்னும் அண்டை வீட்டுக்காரர் கூறினார்.