ஓரறை, ஈரறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 150,000 சிங்கப்பூரர்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்க இம்மாத இறுதிக்குள் $150 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
மளிகைப் பொருட்கள் வாங்க இவ்வாண்டு டிசம்பரில் மேலும் $150 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளும் அடுத்த ஆண்டு அக்டோபரில் $100 பற்றுச்சீட்டுகளும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சு இன்று தெரிவித்தது.
முதல் சுற்று பற்றுச்சீட்டு விநியோகம் இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. அவற்றைப் பெறுபவர்களின் அடையாள அட்டையில் உள்ள முகவரிகளுக்கு பற்றுச்சீட்டுகள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
குறைந்த வருவாய் பெறும் குடும்பங்கள் செலவுகளைச் சமாளிக்க இவ்வாண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொவிட்-19 பராமரிப்பு, ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுத் திட்டம் அமைகிறது.
21 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் மட்டுமே அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பெற தகுதி பெறுவர். ஃபேர்பிரைஸ், ஜயண்ட், பிரைம், ஷெங் சியோங் ஆகிய பேரங்காடிகள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடியும்.
இவ்வாண்டு வழங்கப்படும் மொத்தம் $300 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
பற்றுச்சீட்டுகளை அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பதில் ஏற்படும் திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது. பற்றுச்சீட்டுகள் பெறுநர்களிடம் சரியாக போய் சேருகின்றனவா என்பது கண்காணிக்கப்படும் என்று அமைச்சு கூறியது.
ஃபேர்பிரைஸ், பிரைம், ஷெங் சியோங் பேரங்காடிகளில் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவோர் ‘ஆரோக்கிய தெரிவு சின்னம்’ கொண்ட அனைத்துப் பொருட்களுக்கும் 5 விழுக்காடு விலைத் தள்ளுபடியைப் பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.