வெளிநாட்டினர் இங்கு இருப்பது பற்றி பெரும்பாலான சிங்கப்பூரர்கள் நேர்மறைக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிறிய பிரிவினர் மட்டும் எதிர்மறையாகக் கூறினர்.
மேலும், வெளிநாட்டினரை சிங்கப்பூர் அனுமதிப்பது தொடரவேண்டும் என்னும் கருத்தை இங்குள்ள பெரும்பாலானவர்கள் ஆதரிப்பதாக தான் நடத்திய கருத்தாய்வில் தெரிய வந்ததாக அரசாங்கக் கருத்தறியும் தளமான 'ரீச்' குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான ஆய்வை ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை 'ரீச்' நடத்தியது.
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வயதும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய சுமார் 2,100 சிங்கப்பூரர்கள் ஆய்வில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் தொடர்ந்து வெளிநாட்டினரை அனுமதிப்பது அவசியமானது என்னும் கருத்தை அவர்களில் பெரும்பாலானவர்கள், அதாவது 63 விழுக்காட்டினர் ஆதரித்தனர். அவர்களில் சிலர் இக்கருத்தை வலுவாக ஆதரித்தனர்.
அதே நேரம் பத்து விழுக்காட்டினர் அந்தக் கருத்தை ஆதரிக்கவில்லை. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இல்லாமல் நடுநிலை வகித்தவர்கள் 25 விழுக்காட்டினர் என்ற 'ரீச்' நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக ஆய்வில் பங்கேற்ற 2,000க்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குடிமக்கள் அல்லாதோர் இங்கு இருக்கும் கருத்திற்கு நடுநிலையான பதிலைத் தெரிவித்தனர்.
அதே நேரம் வெளிநாட்டினர் இங்கு இருப்பதை ஆதரித்து 35 விழுக்காட்டினரும் எதிர்த்து 14 விழுக்காட்டினரும் கருத்துத் தெரிவித்தனர்.
குறிப்பாக, வேலை இல்லாதவர்களே அதிருப்தி தெரிவித்தவர்களில் அதிகம். அவர்களில் 26 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் இங்கு இருப்பதை எதிர்க்கின்றனர்.
தற்போது சிங்கப்பூர் ஊழியரணியில் வெளிநாட்டு நிபுணர்கள் அங்கம் வகிக்கும் அம்சம் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
வேலையின்மை அதிகரித்து நிலையற்ற நிலவரம் காணப்படுவதால் இவ்விவகாரம் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியதோடு வேலை நியமன நடைமுறைகளில் பாரபட்சம் இருப்பதாக குறைகூறல் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து அதுபோன்ற நடைமுறைகளில் ஈடுபட்ட 400 நிறுவனங்கள் நியாயமான பரிசீலனைக் கட்டமைப்பின் கண்காணிப்பில் இருப்பதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரீச் கருத்தாய்வில் பங்கேற்றவர்களில் 16 விழுக்காட்டினர் வெளிநாட்டினரின் சமூகப் பழக்கவழக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தனர். சத்தமாகப் பேசுவது, தூய்மையில் கவனம் செலுத்தாது போன்ற அம்சங்களை அவர்கள் குறிப்பிட்டனர்.
வேலை உருவாக்கத்தில் இந்த வட்டாரத்தின் மையமாக சிங்கப்பூர் திகழ்வதால் நன்மைகள் உண்டு என்பதை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஆதரித்தனர்.
சில வேலைகள் வெளிநாட்டினருக்குச் சென்றாலும் தரமான வேலை வாய்ப்புகளை சிங்கப்பூரர்களுக்கு ஏற்படுத்தித் தரும் சிங்கப்பூர் ஒரு வட்டார மையமாகத் திகழ்வது நன்மையே என சுமார் 81 விழுக்காட்டினர் கூறினர்.
அதே நேரம் சிங்கப்பூர் அவ்வாறிருக்கத் தேவை இல்லை எனவும் வெளிநாட்டினர் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் எஞ்சிய 19 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
குடிமக்கள் அல்லாதோரை தொடர்ந்து அனுமதிப்பதில் ஒருசிலரிடமே அதிருப்தி

