குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களின் சம்பளத்தை எப்படி கூட்டலாம் என்பது பற்றி ஆராய ஒரு புதிய சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பணிக்குழு உற்பத்தித் திறன் வளரவும் வழிகளை ஆராயும்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் இது பற்றி நேற்று தமது ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.
‘குறைந்த சம்பள ஊழியருக்கான முத்தரப்பு பணிக்குழு’ என்று அந்தப் புதிய குழு குறிப்பிடப்படும். அந்தக் குழு படிப்படியாக சம்பளம் உயர்த்தப்படும் முன்மாதிரி ஏற்பாட்டை எப்படி விரிவுபடுத்தலாம் என்பது பற்றி ஆராயும்.
நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு உற்பத்தித்திறனை உயர்த்தி முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் எப்படியெல்லாம் நன்மைகளை ஏற்படுத்த முடியும் என்பது பற்றியும் அந்தக் குழு அலசி ஆராயும் என்று திரு இங் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேள னத்தின் தலைவர் ராபர்ட் யாப் இருவரும் நேற்று சந்தித்தனர். அதன் பலனாக சிறப்புப் பணிக்குழு உருவாகி இருப்பதாக திரு இங் மேலும் தெரிவித்தார்.
படிப்படியாக உயரும் சம்பள ஏற்பாடு பற்றிய யோசனையை 2012ல் என்டியுசி தெரிவித்தது. அது முதல் குறைந்த வருமான ஊழியர்களை அதிகமாகக் கொண்ட பல துறைகளில் அந்த ஏற்பாடு நடப்புக்கு வந்திருக்கிறது.
துப்புரவு, பாதுகாவல் தொழில்துறைகளில் ஏறக்குறைய 80,000 ஊழியர்களின் ஊதியம் இப்போது அதிகரித்து இருக்கிறது.
அந்தப் படிப்படியான சம்பள உயர்வு ஏற்பாட்டின் கீழ் இந்தத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஆண்டுதோறும் உயர்வு இடம்பெறுகிறது என்பதை திரு இங் சுட்டிக்காட்டினார். இதர பல திட்டங்களின் மூலமாகவும் சம்பளங்கள் மேலும் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கழிவு நிர்வாகத் துறையிலும் இந்த ஏற்பாட்டை மேம்படுத்தலாம் என்ற யோசனையை என்டியுசி அரசாங்கத்திடம் தாக்கல் செய்து இருக்கிறது.