சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 31,700 பேருக்கு நிரந்தரவாசத் தகுதி அளிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்திருக்கிறார். அதே காலக்கட்டத்தின்போது ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 22,100 புதிய குடிமக்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடாந்திர எண்ணிக்கையில் சிங்கப்பூர் பெற்றோருக்கு வெளிநாடுகளில் பிறக்கும் 1,600 குழந்தைகளும் அடங்கும் என அவர் இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் கூறினார்.
பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல இன்று சிங்கப்பூரின் மொத்த மக்கட்பேறு விகிதம் (total fertility rate) 2.1 க்கும் கீழாகவே இன்னமும் உள்ளது. மக்கள் தொகை காலப்போக்கில் குறையாமல் இருப்பதற்கு இந்த 2.1 விகிதம் தேவைப்படுகிறது. சிங்கப்பூரின் இந்த விகிதம் கடந்த ஆண்டு 1.14 ஆக உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அதே விகிதம் தான் இருந்தது.
தேசிய மக்கள் தொகை மற்றும் திறன் துறையைப் பார்வையிடும் அமைச்சர் இந்திராணி, மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து சிங்கப்பூர் எந்த குறிப்பிட்ட இலக்கையும் வைத்திருக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
குழந்தைப் பிறப்பு விகிதம், ஆயுள் எதிர்பார்ப்பு, குடிநுழைவு, வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் சிங்கப்பூரின் மக்கள் தொகையை பாதிப்பதாக அமைச்சர் இந்திராணி கூறினார். 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 6.9 மில்லியனைக் காட்டிலும் மிகக் குறைவாக இருக்கும் என்று 2018ஆம் ஆண்டு அரசாங்கம் கூறியது இன்றும் பொருந்தக்கூடியதாக இருப்பதாக அவர் கூறினார்.
விண்ணப்பதாரர்களில் சிங்கப்பூரைத் தங்கள் இல்லமாக உருவாக்கக் கடப்பாடு கொண்டுள்ளவர்களுக்கும் சிங்கப்பூருக்குள் ஒருங்கிணைந்து பங்காற்றக்கூடியவர்களுக்கும் மட்டுமே குடியுரிமை மற்றும் நிரந்தரவாசத் தகுதி கொடுக்கப்படும் என்று அமைச்சர் இந்திராணி கூறினார்.