டெங்கியால் இந்த ஆண்டு 28 பேர் உயிர் இழந்து விட்டனர். இதுவரை இல்லாத இந்த உச்சம், கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கைக்கு நிகராகி உள்ளது. டெங்கியால் 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை முழு ஆண்டுக்கும் 25ஆக இருந்தது. ஆனால், அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன இவ்வாண்டில் இதுவரை பதிவான உயிரிழப்புகள்.
இதுவரை 28 பேர் டெங்கி பாதிப்பால் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்திய சுகாதார அமைச்சு, பலியானவர்கள் 25 வயதுக்கும் 92 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்தது. இந்த 28 சம்பவங்களில் 24 பேரின் வேலையிடங்கள் அல்லது வீடுகள், டெங்கிக் குழுமங்கள் வீரியம் பெற்றிருந்த இடங்களில் இருந்ததாகக் கூறப்பட்டது.
மேலும், செப்டம்பர் 5க்குப் பிறகு கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் ஏழு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்னமும் வீரியம் பெற்ற 176 டெங்கி குழுமங்கள் சிங்கப்பூரில் உள்ளதென நேற்று முன்தின நிலவரப்படி கூறப்பட்டது. இதில் ஒன்று, அதிவீரியமானதாகக் கருதப்படும் குழுமம். 300 அல்லது அதற்கு மேற்பட்டோர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழுமம் தொடர்ந்து வீரியம் உடையதாக உள்ளது. இவ்வாண்டு மே 19ஆம் தேதி தொடங்கிய அல்ஜுனிட் மற்றும் கேலாங் வட்டாரக் குழுமத்தில் குறைந்தது 324 டெங்கிச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் வரலாற்றிலேயே இவ்வாண்டின் டெங்கிப் பரவலே ஆக மோசமானது என்று கூறப்படுகிறது. 41 வாரங்களில் 31,338 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகிவிட்டன. 2013ஆம் ஆண்டில் ஆக அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின. அப்போது இருந்த 22,170 சம்பவங்களைக் காட்டிலும் இவ்வாண்டின் டெங்கிச் சம்பவங்கள் மிக அதிகமாக உள்ளன.
வழக்கமாக மே முதல் அக்டோபர் வரை வெப்ப காலத்தில் டெங்கிச் சம்பவங்கள் உச்சத்தைத் தொடும் என்று கூறப்படுகிறது.

