சிங்கப்பூர் - ஹாங்காங் இடையே இருவழி பயண ஒப்பந்தம்

சிங்கப்பூர் - ஹாங்காங் இடையே இருவழி பயண ஒப்பந்தம்

2 mins read
54cf95b5-7be4-4e2e-bf0c-5435cecdfe90
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஏஎஃப்பி -

ஹாங்காங்குடன் 'ஏர் பபுல்' எனப்படும் இருவழி பயண ஏற்பாட்டை சிங்கப்பூர் அறிவித்துள்ளது. பொழுதுபோக்கு உட்பட இருவழி பயண ஏற்பாடுகளுக்கு இது வழி வகுக்கும்.

வெளிநாடுகளுடன் சிங்கப்பூர் மேற்கொண்டிருக்கும் முதல் அத்தகைய ஏற்பாடு இது.

இதன்படி, இவ்விரு நாடுகளுக்கிடையே பயணம் செய்வோர், கொவிட்-19 தொற்று இல்லாத நிலையில், தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

இரு நடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் சிறிய ஆனால், முக்கியமான படி என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். விமானப் போக்குவரத்தின் தொடர்பில் அதிக பங்காளித்துவங்களுக்கு இது மாதிரியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹாங்காங்கிலும் கொரோனா தொற்று குறைவாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இருவழி பயண ஒப்பந்தத்தில், எதிர்பாராத விதமாக, கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் இந்த ஏற்பாடு ரத்து செய்யப்படும் என்றார் திரு ஓங்.

இந்த முயற்சி படிப்படியாக, மிகுந்த கவனத்துடன், ஒரே சீராக பாதுகாப்பாக செயல்படுத்தப்படும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் முக்கியமான விமானப் பயண மையங்கள் என்று குறிப்பிட்ட திரு ஓங், விமானப் பயண மையமாக இருப்பது நாட்டின் பொருளியலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது இரு நாடுகளுக்கும் தெரியும் என்றார். மேலும், நமது விமானப் பயணத் துறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயணிகள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுவது, இரு நாடுகளுக்கு இடையிலான பிரத்தியேக பயணிகளை மட்டும் விமானத்தில் அனுமதிப்பது போன்ற சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
Hong Kong