சிங்கப்பூர் குடும்பங்களில் உள்ள ஒவ்வோர் உறுப்பினருக்கும் கொவிட்-19 சார்ந்த ஆதரவாக சராசரியாக $1,500 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உதவி தேவைப்படும் குடும்பங்களின் அன்றாடச் செலவுகளுக்குக் கைகொடுப்பதற்காக சமூக மேம்பாட்டு மன்றங்களால் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பற்றுச்சீட்டுத் திட்டத்தின் மூலம் 300,000க்கும் அதிகமான சிங்கப்பூர் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
அதன் இரண்டாவது பகுதியாக, $50 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் அடுத்த சில மாதங்களில் வழங்கப்படும் என்று நிதியமைச்சரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார்.
இருநாள் நாடாளுமன்றக் கூட்டத்தின் இறுதியில் நேற்று உரை ஆற்றியபோது நிதியமைச்சருமான திரு ஹெங் இந்த விவரங்களை வெளியிட்டார்.
சிங்கப்பூரர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உறுதியான முடிவு எடுத்து, இவ்வாண்டில் $5.9 பில்லியன் தொகையை குடும்பங்களுக்கு வழங்கி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட தொகையில் இதுவே ஆக அதிகம்,” என்றார் திரு ஹெங். பல்வேறு ஆதரவுத் திட்டங்கள் மூலமாக 2.8 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூர்வாசிகள் ரொக்க வழங்குதொகை பெற்று பயனடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
சராசரியாக ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 1,500 வெள்ளி என்பது கிட்டத்தட்ட அவர்களின் அரை மாத ஊதியத்திற்கு நிகரானது.
குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு பராமரிப்பு, ஆதரவுத் தொகுப்புத் திட்டம் மூலம் அதிக உதவி கிட்டியது என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, உள்ளூர் உணவுக்கடைக்காரர்கள், வர்த்தகர்களுக்கு ஆதரவு வழங்குவதையும் இலக்காகக் கொண்டுள்ள சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுத் திட்டம், 8,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களை ஈர்த்துள்ளது.
‘ஜிஎஸ்டி உயர்வைக் காலவரம்பு இன்றி தள்ளிப்போட முடியாது’
அடுத்த ஆண்டிலும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) 7 விழுக்காடாக நீடிக்கும்.
என்றாலும், நீண்டகால நோக்கில் நாட்டின் நிலையை உறுதி செய்ய, அதன் செலவுத் தேவைகளுக்கு ஆதரவளிக்க வருமானம் தேவைப்படுகிறது என்பதால் ஜிஎஸ்டி உயர்வைக் கால வரம்பு இன்றித் தள்ளிப்போட முடியாது என்று திரு ஹெங் தெரிவித்தார்.
“ஜிஎஸ்டி விகிதத்தை எப்போது உயர்த்துவது என்பதைத் தொடர்ந்து கவனமாக ஆராய்வோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
‘திறந்த நாடாகத் திகழவேண்டும்’
சிங்கப்பூர் கொவிட்-19 தொற்றுப் பரவல் சீரடைந்து, பொருளியல் மீட்சியில் கவனம் செலுத்தத் தொடங்கி இருந்தாலும் சிங்கப்பூர் திறந்த நாடாகவும் உலகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டியதும் அவசியம் என்று துணைப் பிரதமர் ஹெங் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரின் வெற்றிக்கு நாடு, நகரம் என இரு அடையாளங்களையும் கட்டிக்காப்பது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு நகரமாக புதிய, ஆர்வத்தைத் தூண்டும் யோசனைகளுக்குச் செவிமடுக்க வேண்டும் என்றும் ஒரு நாடாக, ஒற்றுமையாக இருந்து, அதன் சுதந்திரத்தைத் தற்காக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இந்த முரண்பட்ட நோக்கங்கள், தெரிவுகள் அல்ல. ஆனால், நமக்கான தேவைகள்,” என்றார் துணைப் பிரதமர்.
நான்கு மில்லியன் என்ற சிறிய உள்ளூர் மக்கள்தொகையைக் கொண்ட சிங்கப்பூர், உலகிற்குப் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் திகழ ‘சாத்தியமுள்ள சிறந்த குழுவை’ அணிதிரட்ட வேண்டியுள்ளது என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
“ஒவ்வொருவரின் வலிமைகளையும் அறிந்து, ஒரு குழுவாக இணைந்து பணியாற்றும் வகையில் நமது அணியில் சிறந்த ஆட்டக்காரர்கள் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.
“அதனால்தான் உலகம் முழுவதும் இருந்தும் சிறந்த திறனாளர்களை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் சிறந்த குழுவை முன்னிறுத்தி, உலக அரங்கில் அடியெடுத்து வைக்க முடியும்,’ என்று திரு ஹெங் கூறினார்.