கொவிட்-19 சூழ்நிலையில் சிங்கப்பூர் சிரமமான காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் வேளையில் மக்கள் வேலைகளை இழப்பதையும் தவிர்த்தாக வேண்டும்.
இதை முக்கியமாக கவனத்தில் கொண்ட சிங்கப்பூர் சம்பள மன்றம் புதிய பரிந்துரைகளை நேற்று வெளியிட்டது.
அதன்படி வேலைகளைத் தக்க வைத்துக்கொள்ள தற்காலிகமாக ஊதிய குறைப்புகளைச் செய்யலாம் என்று முதலாளிகளுக்கு மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் சம்பளக் குறைப்பை மேற்கொள்வதற்கு முன்பு ஊழியர்களின் ஆதரவைப்பெற வேண்டும் என்று வலியுறுத்திய மன்றம், குறைக்கப்பட்ட சம்பளம் பின்னர் வழக்கநிலைக்குத் திரும்பி விடும் என்பதை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.
புதிய வழிகாட்டிகள், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு ஜூன் வரையில் அமலில் இருக்கும்.
புதிய வழிகாட்டிகள் கட்டாயமல்ல. என்றாலும் அவற்றை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாண்டு இரண்டாவது முறையாக சம்பள மன்றம் கூடியது. இதில் சம்பள வெட்டுக்கு ஆறு முக்கிய அம்சங்களை மன்றம் வகுத்துள்ளது.
சம்பளத்தை சரிசெய்வதற்காக ஆண்டு, மாத மாறுவிகித தொகையை முதலாளிகள் பயன்படுத்துவது குறித்தும் வழிகாட்டிகளில் விளக்கப்பட்டுள்ளது.
ஆள் குறைப்புகளைத் தவிர்க்க வேண்டியபட்சத்தில் அடிப்படை சம்பளத்தை மட்டுமே குறைக்க வேண்டும். இதில் நிர்வாகத்தினர் தங்களுடைய சம்பளத்தை முன்கூட்டியே அதிகப்படியாகக் குறைத்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
$1,400க்கும் குறைவாக சம்பளம் ஈட்டுவோருக்கு ஊதிய உயர்வுக்குப் பதிலாக சம்பளத்தை வெட்டாமல் இருக்கலாம். ஆனால் $1,400க்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு சம்பளத்தை வெட்டினாலும் அடிப்படை சம்பளம் $1,400க்குக் கீழ் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மன்றத்தின் பரிந்துரைகள் கூறுகின்றன.
கடந்த 1972ல் சம்பள மன்றம் அமைக்கப்பட்ட பிறகு நான்காவது முறையாக ஒரே ஆண்டில் இவ்வாண்டு 2வது முறையாக கூடியது.
சென்ற மூன்று முறையும் பொருளியல் சிரமமான காலகட்டத்தில் கூட்டப்பட்டது.
சம்பள மன்றத்தின் தலை வரான பீட்டர் சியா, இம்முறை பிரச்சினைகள் சிக்கலானதாக இருந்ததால் நீண்டநேரம் விவாதிக்க வேண்டியிருந்தது என்றார்.
“நிறுவனங்களுக்கும் அதே சமயத்தில் ஊழியர்களுக்கும் நன்மையளிக்கும் தீர்வுகளைக் கண்டறிய முத்தரப்புக் குழுவினர் விட்டுக்கொடுத்துச் செயல்பட்டனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பள மன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவரான தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் மேரி லியவ், ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் மாற்று வேலைக்கு அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டால் இறுதி முயற்சியாக ஆட்குறைப்புக்குப் பதிலாக ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரி வித்தார். சம்பள மன்றத்தில் முதலாளிகள், தொழிற்சங்கங்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் என 22 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.