வியட்னாமில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளித்து வரும் வேளையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 14 ராணுவ வீரர்கள் புதையுண்டு மாண்டனர்.
சம்பவ இடத்தில் காணாமல்போன மேலும் 8 பேரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்நாட்டில் பெய்துவரும் கனமழையால் குறைந்தது 64 பேர் உயிரிழந்துவிட்டதாக வியட்னாமின் பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ள நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது.
குவாங் திரி மாநிலத்திலுள்ள ராணுவ நிலையத்தின் தங்குமிடம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் கற்கள் விழுந்தன. இதில் 22 ராணுவ வீரர்கள் சேற்றில் புதைந்திருக்கலாம் என்று வியட்னாமின் அதிகாரபூர்வ அரசாங்க இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகிறது.
“அதிகாலை இரண்டு மணியில் இருந்து நான்கைந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஒரு மலையே இடிந்து விழுவதுபோல பயங்கரமாக இருந்தது,” என்று அந்தப் பகுதியில் தங்கியிருந்த உள்ளூர் அதிகாரி ஹா நுகோக் டுவோங் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் வியட்னாமில் இதேபோன்ற ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மின்சக்தி ஆலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றச் சென்ற மீட்புப் பணியாளர்களில் 13 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தனர்.
அந்த ஆலையின் பணியாளர்களில் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எஞ்சிய 15 பேரைக் காணவில்லை.
குவாங் திரி ஆற்றின் நீர்மட்டம் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வியட்னாமில் பெய்யும் கனமழையால் அங்கு அடிக்கடி வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம்.
வியட்னாமுக்கு அண்டை நாடான கம்போடியாவில் கனமழையால் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அங்கு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 20 ஆக உயர்ந்தது. அவர்களில் அறுவர் சிறுவர்கள் என்று அந்நாட்டு பேரிடர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.