தாய்மொழிக் கற்றலில் சிரமம் எதிர்நோக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படுகிறது. அவர்களுக்கான பாடங்களில் கூடுதல் விளையாட்டு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய தாய்மொழி ஆதரவுத் திட்டத்தின்கீழ், தொடக்கநிலை 3 மற்றும் 4 மாணவர்கள் சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கல்வி அமைச்சு தயாரித்துள்ள வளங்களைக் கொண்டு அவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவில் ஐந்து முதல் 12 மாணவர்கள் வரை இடம்பெறுகின்றனர்.
2018ஆம் ஆண்டில் தொடக்கநிலை 3 மாணவர்களுக்காக முன்னோட்ட அடிப்படையில் இந்தத் திட்டத்தை கல்வி அமைச்சு தொடங்கியது. சீன மொழிக்காக 14 பள்ளிகளும் மலாய் மற்றும் தமிழ்மொழிக்காக தலா ஐந்து பள்ளிகளும் இந்த முன்னோட்டத் திட்டதில் பங்கேற்றன.
அதையடுத்து இத்திட்டம் கூடுதலான தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தற்போது தொடக்கநிலை 3 மாணவர்களுக்காக 157 பள்ளிகளும் தொடக்கநிலை 4 மாணவர்களுக்காக 52 பள்ளிகளும் இந்தத் தாய்மொழி ஆதரவுத் திட்டத்தை வழங்குகின்றன.
மொத்தம் 2,940 தொடக்கநிலை 3 மாணவர்களும் 872 தொடக்கநிலை 4 மாணவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
அடுத்த ஆண்டிற்குள் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் தொடக்கநிலை 3 மாணவர்களுக்காக இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். 2022ஆம் ஆண்டிற்குள் தொடக்கநிலை 4 மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பலனடைவர். சிங்கப்பூரில் ஏறத்தாழ 185 தொடக்கப் பள்ளிகள் உள்ளன.
மாணவர்கள் தாய்மொழியைத் தன்னம்பிக்கையுடன் கற்பதற்கான உகந்த சூழலை உருவாக்க இந்தத் திட்டத்தில் விளையாட்டு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவின் தாய்மொழித் துறை இயக்குநர் திருவாட்டி ஹெங் போய் ஹோங் தெரிவித்துள்ளார்.
பாடங்களைப் போதிக்கும்போது வாய்மொழி மற்றும் வாசிப்புத் திறன்களில் மாணவர்கள் வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் ஆசிரியர்கள் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் தேவைகள், அட்டவணை ஏற்பாடுகளைப் பொறுத்து, பாடத்திட்ட நேரத்திலோ அதற்கு வெளியிலோ பள்ளிகள் தாய்மொழி ஆதரவுத் திட்டத்தின்கீழ் பாடங்களைக் கற்பிக்கலாம்.
செயின்ட் ஆன்டனி தொடக்கப் பள்ளியில் கடந்த ஆண்டு இத்திட்டத்தில் சேர்ந்து பலனடைந்த மாணவர்களில் ஒருவர் தொடக்கநிலை 4ல் பயிலும் ஸ்ரீராம் கோபிதா.
தமிழில் வாசிப்பதிலும் எழுதுவதிலும் இவர் முன்னேற்றம் அடைந்திருப்பதாக இவரது தாயார் திருமதி ஸ்ரீராம் ரேகா, 39, கூறினார்.
“இதற்கு முன்னதாக கோபிதாவுக்கு தமிழ் எழுத்துகளை அடையாளம் காண தெரியாது. ஆனால், இப்போது குறைவான எழுத்துப்பிழைகளுடன் அவர் எழுதுவதுடன் அவரது சொல் வளமும் மேம்பட்டுள்ளது,” என்றார் இல்லத்தரசியான திருமதி ரேகா.