சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி அனைத்துலக விமான நிலையத்துக்கு நவம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் வாரத்துக்கு மூன்று இடைநில்லா விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது.
இப்போதைய சூழலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானச் சேவைகளை அறிமுகப்படுத்தும் 42வது தடம் இது.
இந்த விமானங்கள் பயணிகள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் என்று அந்த விமான நிறுவனம் இன்று (அக்டோபர் 20) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது விமானச் சேவைகளைக் கொண்டுள்ள இரண்டாவது தடம் இது.
சாங்கி விமான நிலையம் வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புவோருக்கு இந்தச் சேவைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.
இந்தத் தடத்தில் விமானச் சேவை சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும்; நியூயார்க்கிலிருந்து நவம்பர் 11ஆம் தேதி விமானம் சிங்கப்பூர் நோக்கிய பயணத்தைத் தொடங்கும்.
நீண்ட தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏர்பஸ் A350-900 விமானத்தில் 42 வர்த்தகப் பிரிவு இருக்கைகளும், 25 முதல் வகுப்பு எகானமி பிரிவு, 187 எகானமி பிரிவு இருக்கைகளும் இருக்கும்.