அதிகரித்து வரும் நிச்சயமற்ற, இறுக்கமான வேலை சந்தையில் வேலை இழப்பது அல்லது வேலைக்குப் பொருத்தமற்றவராக இருப்பது குறித்து சிங்கப்பூர் ஊழியர்கள் குறிப்பாக வயதானவர்கள் கவலைப்படுகிறார்கள். அண்மைய யுஓபி ஆய்வில், இங்கு பணிபுரியும் 10 பத்தில் ஒன்பது பேர், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் போட்டித்தன்மையுடன் இருக்க அவர்கள் மறுதிறன்பயிற்சி பெற வேண்டும் அல்லது திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று நம்புவது தெரியவந்துள்ளது.
பொருளியல் மந்தநிலையில், புதிய பதவிகளைப் பெறுவதும் கடினமாக இருக்கும் என்றும் ஊழியர்கள் கருதுகிறார்கள். ஆய்வில் பங்கேற்ற சிங்கப்பூரர்களில் 88 விழுக்காட்டினர் நிறுவனங்கள், பல வேலைகளைச் செய்யக்கூடிய ஊழியர்களையே தேர்வுசெய்யும் என்று கருதுகின்றனர். ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் (87%), பணியாளர்களை பணியமர்த்துவதற்குப் பதிலாக மின்னிலக்க மயமாக்குவதையே முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள், அல்லது செலவுகளைக் குறைப்பதற்கான வழிமுறையாக வேலை நீக்கத்தை (88%) நாடுவதாகக் கூறினர்.
வேலை பாதுகாப்பு பற்றிய கவலைகள் முதிய சிங்கப்பூரர்களிடம் மிகவும் அதிகமாக உள்ளது. 56 முதல் 65 வயதிற்குட்பட்ட அனைவருமே (98%) வேலைக்கு ஏற்றவர்களாக இருக்க மறுதிறன், மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினர். 24 முதல் 55 வயதுடையவர்களில், 10 பேரில் ஒன்பது பேர் இதில் ஈடுபாடு காட்டினர். இந்த ஆய்வை ஐந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 18 முதல் 65 வயது வரையுள்ள 3,510 பேரிடம் சென்ற ஜூலை மாதம் யுஓபி ஆசியான் நுகர்வோர் வங்கியும் பிளாக்பாக்சும் நடத்தியது. இந்த ஆய்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த 1,030 பேர் பங்கேற்றனர்.