இந்தி யாவைப் பூர்வீ கமாகக் கொண்ட ஓசிஐ, பிஐஓ அட்டை தாரர்களும் பிற வெளி நாட்டினரும் எந்தக் காரணத் திற்காகவும் இந்தியா சென்று வர அனுமதிக்கும் வகையில் அந்நாடு விசா கட்டுப் பாடுகளைத் தளர்த்தி இருக்கிறது.
ஆயினும், சுற்றுலா விசாக்களில் இந்தியா செல்லத் தடை நீடிக்கிறது. கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் இந்தியா செல்ல முயல்வோர் இந்த அறிவிப்பால் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
“இந்தியாவிற்கு வருகைதர அல்லது இங்கிருந்து கிளம்ப விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் இந்தியருக்கான விசா, பயணக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த இந்திய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அந்த வகையில், சுற்றுலா தவிர்த்த பிற காரணங்களுக்காக ஓசிஐ, பிஐஓ அட்டை வைத்திருப்போரும் மற்ற வெளிநாட்டவர்களும் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவர்,” என்று இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அதே வேளையில், தனிமைப்படுத்தல், வேறு சுகாதார, கொவிட் -19 விவகாரங்கள் தொடர்பில் இந்திய சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சு வெளியிட்டு இருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பயணிகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மின்னணு, சுற்றுலா, மருத்துவ விசாக்கள் தவிர்த்து மற்ற அனைத்து விசாக்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, அவை செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“அத்தகைய விசாக்கள் காலாவதியாகிவிட்டால், இந்தியத் தூதரகங்களில் இருந்து புதிய விசாக்களைப் பெற்றுக்கொள்ளலாம். மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர், தங்களுடன் வருவோருக்கும் சேர்த்து மருத்துவ விசா கோரி விண்ணப்பிக்கலாம். இதையடுத்து, தொழில், கருத்தரங்குகள், வேலை, கல்வி, ஆய்வு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்ல முடியும்,” என்று அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்ப் பரவல் காரணமாக, இவ்வாண்டு பிப்ரவரியில் இருந்து அனைத்துலகப் பயணிகள் இந்தியாவிற்கு வந்து செல்வதைத் தடுக்கும் விதமாக இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.