வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் (வீவக) பேட்டைகளில் செயல்படும் வர்த்தகங்கள் சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உள்ளன. அவை தொடர்ந்து உருமாறி இந்தக் கட்டமைப்பின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் வணிகச் சங்க சம்மேளனத்துடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஹலிமா, வீவக பேட்டைகளில் செயல்படும் வர்த்தகங்கள் இன்றி சிங்கப்பூர் இதேபோன்று இருக்காது என்று சொன்னார்.
“நம் சமூகத்திற்கு துடிப்பைச் சேர்க்கும் இவற்றைப் பலரும் எளிதில் நாடலாம்.
“கடைத்தொகுதிகள் எவ்வளவு வசதியாக இருந்தாலும் அக்கம்பக்க உணவங்காடிக் கடைகளில் மளிகைப்பொருள் கடைகளிலும் கிடைக்கும் வசதி ஈடு இணையற்றது,” என்றார் அதிபர்.
இத்தகைய சிறு வர்த்தகங்கள்தான் பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு மலிவான உணவுகளை வழங்கி வருவதாக திருவாட்டி ஹலிமா கூறினார்.
மாறிவரும் சூழலுக்கு எப்படி தங்களை மாற்றி அமைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அந்த வர்த்தகங்கள் எதிர்நோக்கும் சவால் என்று அவர் குறிப்பிட்டார். இருந்தபோதும் இது குறித்து சிங்கப்பூர் வணிகச் சங்க சம்மேளம் அதன் உறுப்பினர்களுக்கு ஆற்றும் உதவி ஊக்கமளிப்பதாக திருவாட்டி ஹலிமா கூறினார்.
குறிப்பாக, உணவங்காடிக் கடைக்காரர்கள், அக்கம்பக்க சில்லறை விற்பனைக் கடைக்காரர்களில் 70 விழுக்காட்டினர் மின்னிலக்க முறைக்கு மாறவேண்டும் என்ற இலக்கை சம்மேளம் நிர்ணயித்துள்ளது. சிங்கப்பூரிலுள்ள 16,000 உணவங்காடிக் கடைக்காரர்களையும் 17,000 சில்லறை விற்பனைக் கடைக்காரர்களையும் சம்மேளனம் பிரதிநிதிக்கிறது.
நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது வீவக பேட்டைகளில் செயல்படும் வர்த்தகங்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி சம்மேள உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். இவற்றுள் மனிதவள பற்றாக்குறை, இணைய வர்த்தகங்கள் கொடுக்கும் போட்டி ஆகியவை தாங்கள் எதிர்நோக்கும் நீண்டகால சவால்களாக அவர்கள் குறிப்பிட்டனர்.