சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இன்று சுமார் 400 பேர் திரண்டனர். வந்தவர்கள் தங்களின் கடப்பிதழ்களை ஒப்படைத்தனர்.
அவர்களின் பைகளும் சோதனையிடப்பட்டன. பின்னர், எஸ்ஐஏயின் இரு பிரம்மாண்ட ஏ380 விமானங்களில் அமர்ந்து விருந்துண்ண தயாரானார்கள்.
கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் மக்களால் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், விமானத்தில் உணவு உண்ணும் வாய்ப்பை எஸ்ஐஏ வழங்குகிறது.
விமானச் சிப்பந்திகள் உட்பட சுமார் 200 எஸ்ஐஏ பணியாளர்கள் இத்திட்டத்தில் உதவ முன்வந்தனர்.
விமானத்தின் இருக்கைப் பிரிவைப் பொறுத்து மூன்று மணி நேர விருந்துக்காக பயணிகள் $50 முதல் $600 வரை கட்டணம் செலுத்தியிருந்தனர்.
இந்த வார இறுதியில் மதிய உணவுக்கான முன்பதிவு இணையத்தில் அரை மணி நேரத்திலேயே விற்று முடிந்தது.
அதன் பின்னர், நிறுவனம் இரவு உணவுக்கான முன்பதிவையும் அறிவித்து, அதுவும் விற்று முடிந்தது.
அடுத்த வார இறுதியில் சில இடங்களே எஞ்சியுள்ளதாக எஸ்ஐஏயின் நிர்வாகத் துணைத் தலைவர் திரு லீ லிக் சின் கூறினார்.