திரு சுப்புராயன் பழனிவேலு, 52, தன்னை பாக்கியசாலியாகக் கருதுகிறார்.
துல்லியப் பொறியியலில் கைவினைஞர் ஆவதற்குத் தேவைப்பட்ட ‘கிரேடு 2’ தேசிய தொழில்நுட்ப சான்றிதழைப் பெற்ற பிறகு இவருக்கு 2004ஆம் ஆண்டில் நிரந்தவாசத் தகுதி அளிக்கப்பட்டது.
“நிரந்தவாசியான பிறகு வாழ்க்கை எவ்வளவோ மேம்பட்டுள்ளது. எளிதாக வேலை மாறலாம், வீட்டை வாடகைக்கு எடுக்கலாம், சிங்கப்பூரைவிட்டுச் சென்று எந்நேரமும் திரும்பலாம்,” என்று அவர் கூறினார்.
ஆண்டுக்கு மூன்று முறை இவர் தமது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் காண சென்னையிலுள்ள தங்களது வீட்டுக்குத் திரும்புவார். இருந்தபோதும் உண்மையில் தமது இல்லம் சிங்கப்பூர்தான் என அடித்துக்கூறுகிறார்…
திரு சுப்புராயன் சிங்கப்பூரில் வேலை செய்யத் தொடங்கியது முதல் அவரது வாழ்க்கையில் நன்மைக்கு மேல் நன்மை ஏற்பட்டது. கிராமத்திலிருந்து அவரது குடும்பம் நகரத்திற்கு இடம்பெயர முடிந்தது. வாடகை வீட்டில் தங்கி வந்த அவர்கள் இப்போது சொந்த வீட்டில் தங்கியுள்ளனர்.
ஆயினும், இவற்றையெல்லாம் அடைவதற்காக இவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் இவர் 12 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாவலாகப் பணியாற்றுகிறார். பின்னர் தமது நண்பரின் உணவுக் கடையில் பகுதி நேரம் வேலை செய்வார். இவர் உறங்குவது மூன்று மணி நேரம் மட்டுமே ( அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை). இவ்வாறு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரியும் அவர், சொந்தத் தொழிலை நடத்த கனவு காண்கிறார்.
“இவ்வாறு வேலை செய்ய எனக்கு இப்பொழுது தெம்பு உள்ளது. ஆயினும், இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு இப்படி வேலை செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்,” என்று திரு சுப்புராயன் கூறினார்.