'டிரேஸ்டுகெதர்' கருவிகளைப் பயன்படுத்துவோரில் சிலர், கருவிகளை உடைத்துத் திறப்பதாகவும் மின்கலனை அகற்றுவதாகவும் கருவியிலுள்ள ‘கியூஆர்’ குறியீட்டை மாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இவ்வாறு செய்வது குற்றம் மட்டுமல்ல, அது நாட்டையே ஆபத்தில் விட்டுவிடுவதாகக் கூறப்பட்டது.
இணைய உரையாடல் தளங்களில் தங்களின் கருவிகளை மாற்றி அமைத்ததாகச் சில பயனாளர்கள் பதிவிட்டு வருவதைத் தாங்கள் அறிந்திருப்பதாக அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமப் பேச்சாளர் ஒருவர் ‘தி நியூ பேப்பர்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“கருவியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் அல்லது குறும்புச் செயலில் ஈடுபடுவது கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகும்,” என்றார் அவர்.
கருவிகளை விநியோகம் செய்யத் தொடங்கியது முதல் இதுவரை 400,000க்கும் மேற்பட்டவை மக்களின் கைகளைச் சென்றடைந்துவிட்டன. தொடர்புகளின் தடங்களை அறியும் பணியைத் துரிதப்படுத்தியுள்ள இக்கருவிகள், மாற்றி அமைக்கப்பட்டால் பலன் அளிக்காமல் போகலாம் என்றார் பேச்சாளர்.
கருவிகளை எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்ற உரையாடல், ‘ஹார்ட்வேர்ஸோன்’ தளத்தில் சென்ற செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்திருந்தது. கருத்துகள் பதிவிட்ட பலர், கருவிகளின் பயன்பாட்டை எதிர்ப்பதாகத் தெரிந்தது.
மக்களின் நடமாட்டம், கண்காணிப்பு ஆகியவற்றுக்குக் கருவிகள் பயன்படுத்தப்படலாம் என்று சிலர் அக்கறை தெரிவிக்க, தொடர்புகளின் தடமறிவதற்கு மட்டுமே கருவிகள் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்தது.
கொவிட்-19 கிருமித்தொற்று ஒருவருக்கு இருப்பது உறுதியாகும்வரை தரவுகளைச் சேகரிக்கும் கருவி, 25 நாட்களுக்குப் பின் சேர்த்த தரவுகள் அனைத்தையும் தானாக வெளியேற்றிவிடும் என்று பகுப்பாய்வு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஒரு நிபுணர் தெரிவித்தார்.
கருவியைச் சேதப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் ஒருவரும் கூறினார்.
கருவியில் மாற்றம் செய்வோர் பொறுப்பற்று நடந்துகொள்வதாகவும் பிறரை அபாயத்தில் விடுவதாகவும் தொற்று நோய் நிபுணர் லியோங் ஹோ நாம் கூறினார்.
“கருவியைச் சேதப்படுத்துவது நம் நாட்டைச் சீரழிப்பதற்குச் சமம். ஏன் இந்த சிந்தனையற்ற செயலில் ஈடுபடுகிறார்கள்?” என்றார் அவர்.
நாளைமுதல் படிப்படியாக டிரேஸ்டுகெதர் கருவிகளின் விநியோகம் தொடங்கும்
இங்குள்ள 38 சமூக மன்றங்களில் ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மார்சிலிங் சமூக மன்றத்தில் கருவிகளின் விநியோகம் தொடங்கி, படிப்படியாக ஒவ்வொரு குழுத்தொகுதியாகக் கருவிகளின் விநியோகப் பணி தொடரும். குறிப்பிட்ட சில சமூக மன்றங்களில் நீண்ட வரிசை உருவாவதைத் தவிர்க்க இது செயல்படுத்தப்படுகிறது.
டிசம்பர் பிற்பாதிக்குள் அனைத்து சமூக மன்றங்களும் கருவிகளின் விநியோகத்திற்காக திறந்திருக்கும் என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் தெரிவித்தது.
அவரவர் குழுத்தொகுதியின் சமூக மன்றங்களிலிருந்து மட்டுமே பொதுமக்கள் தங்களின் ‘டிரேஸ்டுகெதர்’ கருவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அலுவலகம் நேற்று முன்தினம் அறிவுறுத்தியிருந்தது.
கருவி தேவைப்படுவோர் அதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட பின்னரே, ‘டிரேஸ்டுகெதர்’ கருவி அல்லது செயலியைக் கொண்டு வருகைப் பதிவை உறுதி செய்யும் ‘சேஃப்எண்ட்ரி’ முறை அமல்படுத்தப்படும் என்றது அலுவலகம்.
தொடர்புகளின் தடமறிவதை இரு வழிகளிலும் பதிவு செய்ய இயலும் என்பதால் மக்கள் செயலியை அல்லது கருவியைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.