தமது முன்னாள் கணவரால் கடத்தப்பட்ட தன் இளைய மகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவளை மீட்டுத் தரத் தவறியதற்காக மலேசிய போலிஸ் தலைமை ஆய்வாளர் அப்துல் ஹமீது படோர் 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு தரவேண்டும் என அச்சிறுமியின் தாயார் வழக்கு தொடுத்துள்ளார்.
எம்.இந்திரா காந்தி என்ற அந்தப் பெண்மணி, தன்னுடைய முன்னாள் கணவர் கே.பத்மநாதன் 11 ஆண்டுகளுக்குமுன் மகள் பிரசன்னா தீக்ஷாவைத் தன்னிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறிவருகிறார்.
இந்நிலையில், இழப்பீடு கோரி திருவாட்டி இந்திரா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 28) வழக்கு தொடுத்தார். திரு படோரை முதல் பிரதிவாதியாகவும் மலேசிய போலிஸ், உள்துறை அமைச்சு, மலேசிய அரசாங்கம் ஆகியவற்றை முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பிரதிவாதிகளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குமுன் கூட்டரசு நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் திரு படோர் கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்று திருவாட்டி இந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்.
இப்போது முகம்மது ரிதுவான் அப்துல்லா என அழைக்கப்படும் தன் முன்னாள் கணவரைக் கைது செய்து, தன் மகளை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை திரு படோர் எடுக்கத் தவறினார் என்றும் அவர் தெரிந்தே, பொறுப்பில்லாமல், தீய எண்ணத்துடன் அவ்வாறு நடந்துகொண்டார் என்றும் திருவாட்டி இந்திரா தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திரு படோர் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு மற்ற மூன்று பிரதிவாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 31ஆம் தேதி, பத்மநாதனின் இருப்பிடம் குறித்து போலிசுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த திரு படோர், அவர் தானாக முன்வந்து போலிசிடம் சரணடைய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் பத்மநாதன் தமது விருப்பத்தின் அடிப்படையில் தம்முடைய மூன்று பிள்ளைகளையும் இஸ்லாமிற்கு மாற்றிவிட்டார். அப்போது தீக்ஷா வெறும் 11 மாதக் கைக்குழந்தை.
தமது முன்னாள் கணவரின் இந்தச் செயலை எதிர்த்து திருவாட்டி இந்திரா நீதிமன்றத்தை நாடினார். கடந்த 2018 ஜனவரி 29ஆம் தேதி அவ்வழக்கில் தீர்ப்பளித்த கூட்டரசு நீதிமன்றம், பிள்ளைகளை வேறு சமயத்திற்கு மாற்ற பெற்றோர் இருவரின் ஒப்புதலும் தேவை எனக் கூறி, அந்த மூன்று குழந்தைகளையும் இஸ்லாமிற்கு மாற்றியது செல்லாது எனத் தீர்ப்பளித்தது.