துவாஸ் வெஸ்ட் நீட்டிப்புத் தடத்தில் 150 கிலோமீட்டர் நீள மின்கம்பிவடங்கள் முழுவதும் மாற்றப்பட உள்ளன.
இம்மாதம் 14ஆம் தேதி மூன்று வெவ்வேறு தடங்களில் ஒரே நேரத்தில் நிகழ்ந்த சேவைத்தடையால் 6,700க்கு மேற்பட்ட பயணிகள் ஏறக்குறைய மூன்று மணி நேரம் ரயில்களிலேயே சிக்கிக்கொண்டதை அடுத்து இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் 150 கி.மீ. நீள கம்பிவடங்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்ததாரரான பிரான்சின் ஆல்ஸ்டம் நிறுவனம் மாற்றும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு மாற்றப்படும் கம்பிவடங்கள் மிகுந்த மின்காப்புத்திறனைக் கொண்டிருக்கும் என்று ஆல்ஸ்டம் நிறுவனம் குறிப்பிட்டது.
அத்துடன், துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பில் அமைந்துள்ள மின்சுற்றுத் தகர்ப்பான்களில் 113 திறப்புச் சுருள்களை இவ்வாண்டு இறுதிக்குள் அந்த நிறுவனம் மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆல்ஸ்டம் நிறுவனம் தனது சொந்த செலவில் அப்பணிகளை மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டது.
கடந்த 14ஆம் தேதி மாலை உச்ச நேரத்தில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு, வட்ட ரயில் பாதைகளில் நிகழ்ந்த சேவைத் தடையால் மொத்தம் 123,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் 2017ஆம் ஆண்டில் துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பு திறக்கப்பட்ட பிறகு இதுபோன்ற நான்கு கம்பிவடப் பழுதுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மின்சுற்றுத் தகர்ப்பான்கள் முறையாக வேலை செய்ததால் பெரியளவில் சேவைத் தடை நிகழவில்லை.
இதையடுத்து, பழுதான கம்பிவடங்கள் குறித்து இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஆல்ஸ்டம் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
அந்நிறுவனமும் மேலடுக்குக் கம்பிவடங்களை மாற்றித் தருவதாக ஒப்புக்கொண்டது. இம்மாதத்தில் இருந்து கம்பிவடத்தை மாற்றும் பணிகள் தொடங்கவிருந்தன.
மூன்று தட சேவைத் தடைக்கு ஒரு வாரம் முன்பாகத்தான், அதாவது இம்மாதம் 6ஆம் தேதி துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பில் உள்ள மின்சுற்றுத் தகர்ப்பான்களின் திறப்புச் சுருள்கள் சரியாக உள்ளனவா எனச் சோதிக்கப்பட்டன என்று எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நியோ கியன் ஹோங் தெரிவித்தார்.
திறப்புச் சுருள்களை மாற்றுவதற்கு ஏதுவாக அடுத்த மாதத்தில் இருந்து வாரயிறுதிகளில் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் முன்னதாகவே மூடப்பட்டு, தாமதமாகத் திறக்கப்படும் என்று திரு நியோ கூறினார்.
அடுத்த ஆண்டில் கம்பிவடம் மாற்றும் பணிகள் இடம்பெறும்போது குறிப்பிட்ட ரயில் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாக மூடப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது பங்காக, இனி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின்சுற்றுத் தகர்ப்பான்களைச் சோதிக்கவிருப்பதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. இதுவரை ஆண்டிற்கு ஒருமுறை அவை சோதிக்கப்பட்டு வந்தன.
இதனிடையே, இம்மாதம் 14ஆம் தேதி கம்பிவடமும் திறப்புச் சுருளும் செயல்படாமல் போனதற்கான காரணம் குறித்து இன்னும் விசாரித்து வருவதாக நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது ஆல்ஸ்டம் நிறுவனம் தெரிவித்தது.