ஊழியரணியில் இணைந்த உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இவ்வாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வேலையில் இருந்த உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு முன்னிருந்த நிலையை எட்டியது.
இருப்பினும், ஊழியர் சந்தை அபாயகட்டத்தில் இருந்து விடுபடவில்லை என்றும் ஆட்குறைப்பும் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் 2.29 மில்லியன் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வேலை செய்துவந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 2.34 மில்லியனாக உயர்ந்தது என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட முதற்கட்டப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 2020 மூன்றாம் காலாண்டில் ஏறக்குறைய 50,000 உள்ளூர்வாசிகள் ஊழியரணியில் இணைந்தனர்.
2019 டிசம்பரில் உள்ளூர்வாசிகள் 2.36 மில்லியன் பேர் ஊழியரணியில் இருந்தனர்.
வேலைச் சந்தை சற்று மேம்பட்டுள்ளபோதும் அது அவ்வாறே நீடிக்கும் எனக் கருதுவது அறிவுப்பூர்வமானதாக இராது என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
“உள்ளூர்வாசிகளின் வேலை நிலவரம் முன்பிருந்த நிலையை எட்டவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் டியோ.
மொத்த வேலைவாய்ப்பு குறைந்தது, வேலையின்மை விகிதம் கூடியது
இதனிடையே, வெளிநாட்டுப் பணிப்பெண்கள் தவிர்த்த மொத்த வேலைவாய்ப்பு தொடர்ந்து கீழிறங்கி வருகிறது. இவ்வாண்டின் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் 26,900 பேர் வேலை இழந்ததாகவும் அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டினர் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் தங்களின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதும் கடுமையான வேலை அனுமதிக் கொள்கைகளால் வெளிநாட்டு ஊழியர்கள் வருவது குறைந்து போனதுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்று திருவாட்டி டியோ சுட்டினார்.
இதன் காரணமாக உள்ளூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
வேலை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருப்பதும் ஏப்ரல்-ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் காலியான பணி இடங்களை மீண்டும் நிரப்பி வருவதும் உள்ளூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பிற்கு இன்னொரு காரணம் என்றார் அமைச்சர்.
இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.6 விழுக்காடாக இருந்த உள்ளூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம், அதனையடுத்த செப்டம்பர் மாதத்தில் 4.7% எனச் சற்றே கூடியது.
செப்டம்பரில் உள்ளூர்வாசிகள் 112,500 பேர் வேலையின்றி இருந்தனர். அவர்களில் 97,700 பேர் சிங்கப்பூரர்கள்.
வேலையில் இருக்கும் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கான வேலையின்மை விகிதமும் கூடியுள்ளது. பணிநீக்கம் செய்யப் படுவது தொடரும் நிலையில், வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம் என்று திருவாட்டி டியோ விளக்கமளித்தார்.
ஆட்குறைப்பு அதிகரிப்பு
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் ஆட்குறைப்பும் அதிகரித்தது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 8,130 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிலையில், அதற்கடுத்த மூன்று மாதங்களில் 9,100 பேர் அந்த நடவடிக்கைக்கு ஆளாகினர்.
2019 முதல் காலாண்டு தவிர்த்து, முந்தைய பொருளியல் மந்தநிலைகளின்போது இருந்த ஆட்குறைப்பு உச்ச அளவைக் காட்டிலும் இது அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. 2019 முதல் காலாண்டில் மட்டும் 12,760 வேலைகள் குறைக்கப்பட்டன.
உற்பத்தி, சேவைத் துறைகளில், குறிப்பாக விமானப் போக்குவரத்து, கலை, பொழுதுபோக்கு, கேளிக்கைத் துறைகளில் பணிநீக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருமிப் பரவலாலும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டி இருப்பதுமே இதற்குக் காரணம் என்று அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி இருப்பதால் அத்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, வரும் மாதங்களில் வர்த்தகச் சூழலும் பொருளியல் நிலையும் மேம்படலாம் என்பதால் ஊழியர் எண்ணிக்கையும் ஊதியமும் குறைக்கப்படுவது வரும் மாதங்களில் படிப்படியாகத் தணியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.