தண்ணீரைச் சிக்கனப் படுத்த நிறு வனங்களுக்கு ஊக்க மூட்டும் வகையில் பொதுப் பயனீட்டுக் கழகம் மேலும் நிதி உதவியை வழங்க இருக்கிறது.அந்த உதவித் தொகையைக் கொண்டு தண்ணீரைச் சிக்கனப் படுத்தும் சாதனங்களை நிறுவனங்கள் கொள்முதல் செய்யலாம்.
மாதம் ஒன்றுக்குக் குறைந்தது 1,000 கனமீட்டர் அல்லது அதற்கும் அதிக நீரை பயன்படுத்தும் நிறுவனங்கள் இப்போது $300,000 வரை நிதியுதவி பெற முடியும்.தண்ணீரைச் சிக்கனப் படுத்தும் சாதனத்தை நிறுவு வதற்கு ஆகும் செலவில் பாதி வரை நிறுவனங்கள் நிதி உதவி பெற முடியும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது. பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தண்ணீர் சிக்கன நிதியின்கீழ் இது கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க, தண்ணீரை மறுபுழக்கத்திற்கு விடும் திட்டங்களை அமல்படுத்துகின்ற, மாற்று தண்ணீர் வளங்களைப் பயன்படுத்தும் திட்டங்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு இன்னும் அதிக நிதியுதவி கிடைக்க இருக்கிறது.
நியூ வாட்டர் குடிநீர், தொழிற்சாலை தண்ணீர் ஆகியவற்றைச் சிக்கனப்படுத்தி இந்தக் கூடுதல் உதவியை அவை பெறமுடியும். இந்த உதவி, ஒரு திட்டத்திற்கு உச்சத் தொகையாக $1 மில்லியன் கிடைக்கும் என்று இந்தக் கழகம் நேற்று அறிக்கையில் தெரிவித்தது. இத்தகைய திட்டங்களுக்கும் செயல்திட்டங்களுக்கும் உரிய நிதி உதவி கிடைக்கும் காலகட்டமும் ஏழு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னோடித் திட்டங்களுக்கும் முழுத் தொகை உண்டு. திட்டச் செலவில் பாதி வரை இது கிடைக்கும்.
இந்தப் புதிய நிதி ஏற்பாடுகள் இன்று முதல் நடப்புக்கு வருகின்றன. இதன் மூலம் சுமார் 3,200 நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கழகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் குடும்பம் சாராத துறை சுமார் 55 விழுக்காட்டு தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் இந்த அளவு 2060ல் 70 விழுக்காடாகக் கூடும் என்று கணிக்கப்படுவதாகவும் கழகத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது.பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தண்ணீர் சிக்கன நிதி 2007ல் தொடங்கப்பட்டது. நிறுவனங்கள் தண்ணீரைச் சிக்கனப்படுத்தும் திட்டங்களை அமலாக்கி அதன்மூலம் தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்த ஊக்கமூட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்த நிதி, நிறுவனங்கள் மேற்கொள்ளும் அத்தகைய தண்ணீர் சிக்கன திட்டங்களுக்கு மானியம் வழங்குகிறது.
இந்தக் கழகம் 350க்கும் அதிக திட்டங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, $24 மில்லியனுக்கும் அதிகத் தொகையை வழங்கி இருக்கிறது.

