ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், 77, அடுத்த அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைக்கும் காலம் நெருங்கி வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது. வெற்றி பெறுவதற்குத் தேர்தல் சபையில் 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 264-213 என்ற கணக்கில் திரு பைடன் முன்னிலையில் இருந்ததாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
வழக்கமாக, குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் ஜார்ஜியா மாநிலத்திலும் அக்கட்சியின் வேட்பாளரான அதிபர் டிரம்ப்பைக் காட்டிலும் திரு பைடன் 917 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். இது இன்று காலை நிலவரம்.
பென்சில்வேனியாவில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இருப்பினும் அவருக்கும் பைடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
பென்சில்வேனியா மாநிலத்தில் அல்லது ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா ஆகிய மாநிலங்களில் ஏதேனும் இரண்டில் வெல்லும் பட்சத்தில் திரு பைடன் அடுத்த அதிபராகிவிடுவார்.
மாறாக, ஜார்ஜியாவிலும் பென்சில்வேனியாவிலும் கண்டிப்பாக வென்று, நெவாடா அல்லது அரிசோனாவில் முன்னிலை பெற்றால் மட்டுமே திரு டிரம்ப்பால் அதிபர் பதவியைத் தக்கவைக்க முடியும். ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது.
அத்துடன், வாக்குகள் எண்ணப்பட வேண்டிய ஃபிலடெல்ஃபியா, அட்லாண்டா உள்ளிட்ட பல நகரங்களில் வழக்கமாக ஜன நாயகக் கட்சிக்கே அதிக வாக்குகள் விழும் என்பதால் திரு பைடன் தொடர்ந்து முன்னேறிச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஃபிலடெல்ஃபியாவில் வாக்கு எண்ணிக்கை நிலையத்தின்மீது தாக்குதல் தொடுக்க இடம்பெற்ற சதித்திட்டம் குறித்து விசாரித்து வருவதாக போலிஸ் தெரிவித்து இருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி அரிசோனாவில் திரு பைடனின் முன்னிலை 47,000 வாக்குகளாகக் குறைந்தன.
அதேபோல, நெவாடாவிலும் அதிபர் டிரம்ப்பைவிட அவர் 12,000 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றிருந்தார்.
பென்சில்வேனியாவிலும் ஜார்ஜியாவிலும் நேற்றைக்குள் வாக்குகளை எண்ணி முடித்துவிட முடியும் என அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.