விழாக்காலத்தை சமூகத்தில் அனைவரும் சேர்ந்து கொண்டாடவேண்டும் என்ற எண்ணத்தில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) இந்திய வர்த்தகத் தலைவர்களுடன் இணைந்து வசதி குறைந்த குடும்பங்களுக்கு விழாக்கால அன்பளிப்புகளை வழங்கியுள்ளது. சிண்டாவின் இந்திய வர்த்தகத் தலைவர்களின் வட்டமேசை (ஐபிஆர்) அமைப்பைச் சேர்ந்த மூத்த வர்த்தகத் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று பலகாரங்கள், மளிகைப் பொருட்கள் கொண்ட அன்பளிப்புப் பை
களையும் பற்றுச்சீட்டுகளையும் வழங்கினர். இந்த விநியோகம் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது.
சிண்டாவின் பங்காளித்துவ சமூக அமைப்புகளில் ஒன்றான இயோ சூ காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் உதவியுடன் வசதி குறைந்த 200 குடும்பங்கள் கண்டறியப்பட்டன.
ஐபிஆர் அமைப்பின் ஆலோசனைத் திட்டத்தின்கீழ் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 20 மாணவர்கள் அன்
பளிப்புத் தொகுப்புகளின் விநியோகத்திற்குக் கைகொடுத்தனர்.
"இந்த பண்டிகைக் காலத்தில் எல்லாரும் கொண்டாடவேண்டும் என்பதுதான் நமது இலக்கு. வசதி குறைந்த நமது சகோதர சகோதரிகள் சிரமத்தில் இருக்கக்கூடும். கூடவே இந்தக் கொவிட்-19 கிருமித்தொற்றுக் காலத்தில் அவர்கள் மேலும் கஷ்டத்தில் இருக்கக்கூடும். அவர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்," என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்தது நல்ல அனுபவமாக இருந்ததாகக் கூறினார் ஐபிஆர் அமைப்பின் தலைவர் திரு கௌதம் பானர்ஜி.
தீபாவளியை சமூகத்தில் உள்ள வசதி குறைந்தவர்களுடன் குதூகலமாகக் கொண்டாடி மகிழ சிண்டாவின் 'புரோஜெக்ட் கிவ்' பராமரிப்பு நடவடிக்கைகள் திட்டம் ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது. இத்திட்டத்தில் சமூக அமைப்புகள், பங்காளித்துவ அமைப்புகள், நன்கொடையாளர்கள், தனிநபர்கள் சிண்டாவுடன் இணைந்து உதவுகின்றனர்.

