கடந்த இரு வார இறுதிகளில் லிட்டில் இந்தியாவில் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறிய எண்மருக்கு தலா $300 அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட தளர்வு நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து சுற்றப்பயணிகளிடையே பிரபலமான கடைகளிலும் லிட்டில் இந்தியா போன்ற இடங்களிலும் சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கூட்டத்தைச் சமாளிக்க உச்ச நேரங்களில் கூடுதலான அமலாக்க அதிகாரிகளும் பாதுகாப்பு இடைவெளியை உறுதி செய்யும் தூதுவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக வாரியத்தின் கலை, கலாசார இடங்கள் பிரிவின் இயக்குநர் செரின் டான் தெரிவித்தார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று திருமதி டான் குறிப்பிட்டார்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்புநோக்க, கடந்த இரு வாரயிறுதிகளில் லிட்டில் இந்தியாவில் கூட்டம் சற்று குறைவாக இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு கண்டறிந்தது.
இருந்தாலும், தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க மக்கள் லிட்டில் இந்தியாவுக்குச் செல்வதால் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு கேம்பல் லேனில் தீபாவளிச் சந்தை அமைக்கப்படவில்லை.

