சிங்கப்பூரில் துல்லியப் பொறியியல் துறை வளர்ந்து வருகிறது. அந்தத் துறைக்கு மேலும் ஆதரவு கிடைக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் அறிவித்து இருக்கிறார்.
சிறியவை பெரியவை என்று பாராமல் எல்லா நிறுவனங்களுக்கும் மட்டுமின்றி இதர துறைகளுக்கும் உதவிக்கரம் நீட்டி வந்துள்ள ஒரு திட்டம் மேம்படுத்தப்படுவதால் மேலும் உதவி கிடைக்க வழி ஏற்படும்.
கொவிட்-19 பாதிப்புகள் இருந்தாலும் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளுக்குத் தேவை அதிகரிக்கிறது. அதன் காரணமாக துல்லியப் பொறியியல் துறை வளர்ந்து வருகிறது. அந்தத் துறையின் ஒட்டுமொத்த ஏற்பாட்டையும் பலப்படுத்துவது நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
திரு சான், வாராவாரம் தொழில்துறை நிலவரங்கள் பற்றி விளக்கம் அளிக்கும் நடைமுறையையொட்டி நேற்று ஊடகத்திடம் பேசினார்.
ரோட்ஜ் & சுவார்ட்ஸ் என்ற ஜெர்மனியின் தொழில்நுட்பக் குழுமத்திற்கு அமைச்சர் சென்றார்.
5ஜி தொழில்நுட்பங்கள் வருகை, இணையம் மூலம் பலவற்றையும் செய்யும் நிலை எல்லாம் தொழில்நுட்பத்துறையில் இடம்பெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் துல்லியப் பொறியில் துறை பின்னணியில் இருந்து பெரிதும் உதவுகிறது என்று திரு சான் கூறினார்.
இந்தத் துறையில் தொடர்ந்து முதலீடு செய்தால், மூலாதார பொறியியல் ஆற்றல்களைப் பெருக்கினால் இந்த வட்டாரத்திற்கும் முழு உலகிற்கும் துல்லியப் பொறியியல் துறை மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் திகழும் என்பதில் ஐயமில்லை என்றார் அமைச்சர்.
ஆசியாவின் வளர்ச்சி தொடர்வதாலும் வரும் ஆண்டுகளில் தேவை அதிகரிப்பதாலும் இந்தத் துறையில் வாய்ப்புகள் மண்டிக் கிடக்கும் என்றார் திரு சான்.
துல்லியப் பொறியியல் துறை, சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 10% வளர்ந்தது.
இந்தத் துறையின் வளர்ச்சி தனிப்பட்ட நிறுவனங்களை மட்டும் பொறுத்து இருப்பதில்லை.
சிறிய, நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனும் இதில் மிக முக்கியம் என்பதால் அவை பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும். அதோடு தொடர்ந்து அவை இத்துறைக்குத் தேவைப்படும் பொறியியல் ஆற்றலை பேணி வளர்த்து வரவேண்டும்.
இப்படிச் செய்தால்தான் நீண்ட காலப்போக்கில் வளர்ச்சியைக் கட்டிக்காக்க முடியும் என்று அமைச்சர் விளக்கினார்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு 'பேக்ட்' என்ற திட்டம் 2022 மார்ச் வரை மேம்படுத்தப்படும். நிறுவனங்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் மற்றவற்றுடன் பங்காளித்துவ உறவை பேணி வளர்க்கவும் இந்தத் திட்டம் உதவுகிறது.
2010ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம் 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 280க்கும் கூடுதலான திட்டங்கள் பலன் அடைந்துள்ளன.

