நிறுவனத்திற்குத் தேவையான திறன் கொண்ட உள்ளூர்வாசிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ‘டெக்@எஸ்ஜி’ திட்டம் கைகொடுத்துள்ளது.
‘எம்பளாய்மண்ட் பாஸ்’ (இபி) என்ற வேலை அனுமதி அட்டைக்கு, வெளிநாட்டு நிபுணர்கள் தகுதிபெற நீக்குப்போக்குடைய விதிகளை இத்திட்டம் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் மனிதவள அமைச்சிடம் ஒப்புதல் அளித்து வருகின்றன.
கழகத்தின் மற்றொரு முயற்சியான ‘டெக்.பாஸ்’ திட்டத்தையும் நிறுவனங்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. ‘இபி’ போன்று அல்லாமல் இப்புதிய ‘டெக்.பாஸ்’ அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு நிபுணர்கள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களில் பணிபுரியும் சுதந்திரத்தைப் பெறுவர்.
“எங்களின் பொறியாளர் குழுவில் தகுதியானவர்களை வேலையில் சேர்க்க ‘டெக்.பாஸ்’ திட்டம் எங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். ஒரே நிறுவனத்துடன் இருக்கும் கட்டாயம் இல்லாமல் இந்த வகை வேலை அனுமதி அட்டையை வைத்திருப்பவருக்குக் குறிப்பிட்ட ஒரு நீக்குப்போக்குத் தன்மை இருக்க திட்டம் உதவுகிறது,” என்றார் ‘எக்ரோனிஸ்’ இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டேனிஸ்லாவ் புரோடசோவ்.
‘எக்ரோனிஸ்’ போன்ற இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, தங்களின் சிங்கப்பூர் ஊழியர் அணியையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள, உயர்தரத் திறனாளர்களை வேலையில் அமர்த்தச் சிரமப்படுவதாகக் கூறுகின்றன.
இத்தகைய மனிதவள சிக்கலைக் களைய உதவுவதுடன் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கட்டமைப்பு, வளர்ச்சி காணவும் உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ‘டெக்.பாஸ்’ தொழில்நுட்ப வேலை அனுமதித் திட்டத்தை இம்மாதம் நவம்பர் 12ஆம் தேதியன்று அறிவித்தது.
ஈராண்டுக்குப் பிறகு ‘டெக்.பாஸ்’ அட்டை வைத்திருப்பவர், மேலும் ஈராண்டு காலத்திற்கு அதைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
அத்துடன் இவ்வகை அட்டை கொண்டோர், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் குழுவிலும் இடம்பெற முடியும்.
இங்குள்ள நிறுவனங்களில் பங்குதாரர் அல்லது முதலீட்டாளராகவும் இருக்க இயலும்.
மேலும், இவர்களுக்குப் புதிதாக வர்த்தகம் ஒன்றைத் தொடங்கவும் இயக்கவும் அனுமதி உண்டு.
‘டெக்.பாஸ்’ திட்டத்திற்கான முதல் 500 விண்ணப்பங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கஉள்ளன.
நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்பதோடு நின்றுவிடாமல், ‘டெக்.பாஸ்’ அட்டை வைத்திருப்பவர்கள் உள்ளூர் தொழில்நுட்ப நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் உதவலாம் என்று கழகம் தெரிவித்தது.
உயர்கல்விக் கழகங்களில் விரிவுரையாளர், இங்கு நிறுவனங்களில் ஆலோசகராக இருந்து பயிற்சி அளிப்பவர் போன்ற பணிகளில் அவர்கள் இவ்வாறு ஆதரவளிக்கலாம் என்று கூறப்பட்டது.