மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை இன்று (நவம்பர் 30) பொதுமக்கள் தானியங்கி இயந்திரங்களிலிருந்து பெற்றுக்கொண்டனர்.
இந்த முகக்கவசங்களுக்கான விநியோகம் இன்று தொடங்கியது. முகக்கவசங்களை தெமாசெக் அறநிறுவனம் விநியோகிக்கிறது.
தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருந்ததாக அவற்றிலிருந்து முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தங்களுக்கு ஏற்ற முகக்கவசத்தைத் தேர்ந்தெடுத்து, அடையாள அட்டையை ஸ்கேன் செய்து அவர்கள் முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் ஓர் இலவச முகக்கவசப் பொட்டலம் வழங்கப்படுகிறது.
அதில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய இரண்டு முகக்கவசங்களும் மூன்று முகக்கவச வடிப்பான்களும் உள்ளன.
முகக்கவசங்களை விநியோகம் செய்ய தீவெங்கும் மொத்தம் 1,200 தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 800க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தத் தானியங்கி இயந்திரங்கள் உள்ளன.
பேருந்து நிலையங்கள், சமூக நிலையங்கள், குடியிருப்பாளர் குழு நிலையங்கள், தெமாசெக் ஷாப்ஹவுஸ், பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதி உட்பட பல இடங்களில் இந்தத் தானியங்கி இயந்திரங்கள் உள்ளன.
தெமாசெக் அறநிறுவனம், மூன்றாவது முறையாக முகக்கவசங்களை விநியோகிக்கிறது.
தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல இடங்களில் பொதுமக்களுக்கு உதவ ஊழியர்களும் தொண்டூழியர்களும் இருந்தனர்.
பொருத்தமான முகக்கவசங்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்களுக்கு அவர்கள் உதவினர்.
சிறிய, நடுத்தர, பெரிய, அதிபெரிய முகக்கவசங்கள் உள்ளன. எட்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு சிறிய முகக்கவசங்கள் பொருத்தமாக இருக்கும்.