கொவிட்-19 நெருக்கடிக்கு முன்பிருந்ததைப் போல 70%-80% வருவாய் ஈட்டுகின்றன.
உணவு, பானத் துறையின் மீட்சி சீராக இருந்து வருவதாகவும் பல்வேறு நிறுவனங்களின் வருவாய் கொவிட்-19 தொற்றுக்கு முன்பு இருந்த நிலையில் 70%-80% வருவாயை ஈட்டி வருவதாகவும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சுங் தெரிவித்துள்ளார்.
மின்னிலக்க முறைக்கு மாறியதே உணவு, பானத் துறையின் மீட்சிக்கு முக்கிய காரணம் என்று அமைச்சர் சான் கூறினார்.
ஜூலை மாதத்தில் சிங்கப்பூர் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தில் இருந்து வெளியான பின்னும் அதிகமான உணவகங்களும் உணவுக்கடைகளும் இணையம் வழியாக உணவு, பானங்களை விற்று வருவதாக திரு சான் சொன்னார்.
சுவீ சூன் டிம் சம் உணவகத்திற்கு நேற்று சென்றிருந்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.
கடந்த ஜனவரி மாதம், உணவுத் துறையின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 10% இணையம் வழியாக நடைபெற்றது. இந்நிலையில், நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பிலிருந்த மே மாதத்தில் அவ்விகிதம் ஏறத்தாழ 45 விழுக்காடாக உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பரில் அவ்விகிதம் ஏறக்குறைய 20 விழுக்காடாக இருந்தது என்றும் திரு சான் கூறினார்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உணவு, பானத் துறையின் பங்கு 1.1%. சிங்கப்பூர் ஊழியரணியில் 5.5 விழுக்காட்டினரை அத்துறை கொண்டுள்ளது.
செயல்திறன்மிக்க வகையில் தொழிலை நடத்த, உணவு, பான நிறுவனங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டிய தேவையை கொரோனா நெருக்கடி முடுக்கிவிட்டு இருப்பதாக திரு சான் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்த அதிகமான உணவு, பான நிறுவனங்கள் அரசாங்கத்தின் உதவியை நாடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியம் கோரி கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வந்த விண்ணப்பங்களைக் காட்டிலும், இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் நான்கு மடங்கிற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவ்வாண்டில் இதுவரை அம்மானியம் கோரி வந்த 2,700க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று திரு சான் தெரிவித்தார்.
மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்த உதவும் வகையில் அரசாங்கம் பல்வேறு திட்டங்கள் மூலம் உணவு, பான நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
எடுத்துக்காட்டாக, தொழில்நிறுவன மேம்பாட்டு மானியம் மூலமாக அல்லது மானியத்துடன் கூடிய மின்னிலக்கச் சந்தைப்படுத்தல் பாடப்பிரிவுகள் மூலமாக நிறுவனங்களுக்கு மின்னிலக்கச் சந்தைப்படுத்தல் ஆதரவு வழங்கப்படும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாதல் திட்டத்தின்கீழ் வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் நிறுவனங்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவி வழங்கப்படும்.
எடுத்துக்காட்டாக, மின்னிலக்க மீள்திறனுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின்கீழ் உணவு, பான நிறுவனங்கள் 10,000 வெள்ளி வரை ஊக்கத்தொகையாகப் பெறலாம்.
வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்ற புதிய வர்த்தக மாதிரிகளைச் சோதித்துப் பார்க்கவும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சர் சான் கூறினார்.
உணவுத் தொழில்நுட்பத்தையும் புத்தாக்கங்களையும் முன்னெடுக்க, உணவு, பான நிறுவனங்களுக்கு வளங்களை வழங்கும் ‘ஃபுட்இன்னொவேட்’ திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அப்படி நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகி, செயல்முறைகளைத் தானியக்க முறைக்கு மாற்றுவதன் மூலம், உள்ளூர்வாசிகளை அதிகம் கவரும் வகையில் வேலைகளை மறுவடிவமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்க வேண்டியது குறையும் என்றும் திரு சான் விளக்கினார்.
கடந்த நவம்பர் மாத நடுப்பகுதி வரை, முப்பதுக்கும் அதிகமான உணவு, பான நிறுவனங்களைச் சேர்ந்த 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் உணவு சேவைகளுக்கான வேலை மறுவடிவமைப்பு புதுத்திறன் பயிற்சித் திட்டத்தில் இணைந்து புதிய திறன்களைக் கற்றுக்கொண்டனர் அல்லது கற்று வருகின்றனர்.