சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 1) மேலும் 10 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அதனையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,228 ஆனது.
இன்று பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 20 நாட்களாக விடுதிகளில் கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லாமல் இருந்த நிலையில், அங்கு இன்று ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு கிருமித்தொற்று பதிவானது; எஞ்சிய 8 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு, இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் இன்றிரவு வெளியிடப்படும் என அமைச்சு தெரிவித்தது.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், நேப்பாளத்திலிருந்து குறுகியகால வருகை அனுமதியில் இங்கிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க வந்தவர்.
கடந்த மாதம் முதல் தேதி இங்கு வந்த அவர், 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்று தெரியவந்தது.
பீஷான் ஸ்திரீட் 22ல் வசித்த அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்ட மேலும் நால்வருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவர் ஜப்பானிலிருந்து திரும்பி வந்த சிங்கப்பூரர். மற்ற மூவரும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். அவர்களில் இருவர் இந்தோனீசியாவிலிருந்தும் ஒருவர் இந்தியாவிலிருந்தும் வந்தவர்கள்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இதுவரை 29 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 62.7 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்; 1.45 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.