‘பிஎம்இடி’ எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் அல்லாதவர்களும் கொவிட்-19 சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக இன்று (டிசம்பர் 3) மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
‘பிஎம்இடி’ பிரிவினரைவிட ‘பிஎம்இடி அல்லாத’ பிரிவினரின் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர்களது வேலை நேரம் பெருமளவு குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளில் ‘பிஎம்இடி அல்லாத’ பிரிவினர் அதிக அளவில் இருப்பதாகவும் அவர்கள் வேலையிடத்தில் இருந்துதான் வேலை செய்ய முடியும் என்ற கட்டாயம் இருப்பதாகவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. கடந்த ஜூன் மாதத்தில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இன்றைய அறிக்கை வெளியானது.
கட்டுமானம், சில்லரை வர்த்தகம், உணவு மற்றும் பானத் துறை அந்தத் தொழில்துறைகளில் அடங்கும்.
இருந்தபோதும் ‘பிஎம்இடி அல்லாத’ பிரிவினரிடையே வேலையின்மை விகிதம் 6.4 விழுக்காடாக உள்ளது. ஆனால், ‘பிஎம்இடி’ பிரிவினரிடையே வேலையின்மை விகிதம் 3.5 விழுக்காடாக உள்ளது.
அனைத்துலக அளவிலான நிதி நெருக்கடி காலத்தின்போது சிங்கப்பூரில் ‘பிஎம்இடி அல்லாத’ பிரிவினரிடையே வேலையின்மை விகிதம் 6.9 விழுக்காடாகவும் ‘பிஎம்இடி’ பிரிவினரிடையே வேலையின்மை விகிதம் 3.9 விழுக்காடாகவும் இருந்தது.
வேலையின்மை விகித அதிகரிப்புக்கு ‘குறுகியகால வேலையின்மை’ அதாவது 25 வாரங்களுக்குட்பட்ட காலத்தில் வேலையின்றி இருந்தது காரணம் என்று கூறப்பட்டது.
‘பிஎம்இடி’ பிரிவைச் சேர்ந்த 40 வயதுகளில் இருந்தோரிடையே நீண்டகால வேலையின்மை (25 வாரங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு வேலையின்றி இருத்தல்) மற்ற வயதுப் பிரிவினரைவிட அதிகமாக இருந்தது.
வேலை தேடுவோருக்கு வேலைகளை ஏற்படுத்தும் விதத்தில் பொருளியல் நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவடைவதை உறுதி செய்ய மற்ற முகவைகளுடன் இணைந்து பணியாற்றுவதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.