கொவிட்-19 பரவலுக்குப் பிந்திய சூழலுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த நடவடிக்கை
கொவிட்-19 தொற்றுக்குப் பிந்திய சூழலுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்த தமது அமைச்சு நான்கு முக்கிய உத்திகளைக் கையாளும் என கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
வசதி குறைந்த மாணவர்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தல், மாணவர்களின் திறமைகளைப் பட்டை தீட்ட பல வழிமுறைகளை உருவாக்குதல், புத்தக அறிவைத் தாண்டி மனப்பாங்கையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ள உதவுதல், பலதுறைக் கற்றலில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவையே அந்நான்கு உத்திகள்.
“இணையம் வழியாகப் பொருள் வாங்குதல், மின்னிலக்கப் பொழுதுபோக்கு, மெய்நிகர் தொடர்புகள், மெய்நிகராக முன்னிலையாதல் போன்ற போக்குகளைக் கைக்கொள்வது தொடர்ந்து அதிகரிக்கும். கொவிட்-19 பரவல் ஓய்ந்த பிறகும் இப்போக்குகள் உறுதியாகத் தொடரும்,” என்று அமைச்சர் வோங் சொன்னார்.
“பல்வேறு நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் மீட்சி சமமாக இல்லை. கொரோனா நெருக்கடிக்குப் பின்னரும் நமது வாழ்க்கைமுறையில், வேலையில், கலந்துறவாடுவதில் அதன் விளைவுகள் நீடிக்கும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 115வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை ஒட்டி ஏற்பாடு செயப்பட்டுள்ள இணையக் கருத்தரங்குத் தொடரின் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் வோங், ‘எதிர்காலத்தில் கல்வி’ குறித்துப் பேசினார்.
‘எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் கருப்பொருளுடன் கூடிய இந்த ‘என்யுஎஸ்115’ சிறப்புப் பேச்சாளர் தொடர், அடுத்த ஆண்டின் நடுப்பகுதி அல்லது மூன்றாம் காலாண்டு வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வசதி குறைந்த மாணவர்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த இடம்பெற்று வரும் முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கல்வி அமைச்சின் முதல் உத்தி என்றார் திரு வோங்.
“வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் வேறுபாடுகளைக் களைந்து, குழந்தைகளுக்கு முழுமையான, பொருத்தமான சுகாதார, கற்றல், வளர்ச்சி ஆதரவு வழங்குவதற்கு அதிக முதலீடு செய்ய விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
மாணவர்களின் திறமைகளைப் பட்டை தீட்டுவதற்கான பல வழிமுறைகளைக் கல்வி நிலையங்கள் கொண்டிருப்பதையும் தொடர்ந்து அவற்றை உருவாக்குவதையும் உறுதிப்படுத்துவது கல்வி அமைச்சின் இரண்டாவது உத்தி.
“ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அவர்கள் கற்கவும் வளரவும் உதவ வெவ்வேறு அணுகுமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன,” என்றார் அமைச்சர் வோங்.
மூன்றாவதாக, மாணவர்கள் புத்தக அறிவைத் தாண்டியும் வேறு மனப்பான்மையையும் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டி உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
“நமது சாதகமான போட்டித்தன்மையையும் ஒருவருக்கொருவர் உறவை வளர்த்துக்கொள்வது, குழுக்களாக இணைந்து பணியாற்றுவது, ஆக்கபூர்வமாகச் சிந்திப்பது போன்ற நமது பலங்களையும் தொடர்ந்து வலியுறுத்துவதே நம்மை முன்னெடுத்துச் செல்லும்,” என்று அவர் எடுத்துரைத்தார்.
தொடக்கப் பள்ளியில் இருந்தே மாணவர்கள் இப்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர், அதற்கேதுவாக சில குறிப்பிட்ட ஆண்டுகளில் மதிப்பீடுகளையும் தேர்வுகளையும் ரத்து செய்து, அதற்கான நேரத்தையும் சூழலையும் அமைச்சு ஏற்படுத்தித் தருகிறது என்றும் சொன்னார்.
வாழ்க்கைத்தொழிலுக்கு ஆதரவளித்து, மாறி வரும், நிச்சயமில்லா எதிர்காலத்திற்குச் சிங்கப்பூரர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் கற்றலை ஊக்குவிப்பது அமைச்சின் நான்காவது முக்கிய உத்தி.
அதே நேரத்தில், அதில் சரியானதொரு சமநிலை பேணப்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் சுட்டினார்.
“ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குத் தள்ளிவிட விரும்பவில்லை. நிபுணத்துவப் பாடம் என்பது இப்போதும் எப்போதும் முக்கியமானதாக இருக்கும்,” என்று திரு வோங் தெரிவித்தார்.