அமெரிக்காவில் கடந்த மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றால் சுமார் 37,000 பேர் உயிரிழந்தனர்; மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், அங்கு தினசரி உயிரிழப்புகள் 2,000வரைகூட ஆகலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் 100,000க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்ததைவிட இது இரு மடங்குக்கும் அதிகம்.
நேற்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 276,000.
பொதுவாக குளிர்காலங்களில் அமெரிக்காவின் சில மாநிலங்களில் உடல்நலக் குறைவுக்காக பலர் அனுமதிக்கப்படுவர்; ஆனால், இந்த ஆண்டு நாடு முழுமைக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கலிஃபோர்னியாவில் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவு வேகமாக நிரம்பி வரும் நிலையில் அம்மாநில ஆளுநர் கவின் நியூசம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலம் வரை மக்களை வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தும் ஆணைகளை நாளை முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாக பே ஏரியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று புதிதாக 316 பேருக்கு தொற்று பதிவானது; தொடர்ந்து இரண்டாவது நாளாக 300க்கு அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 5.3 விழுக்காட்டினருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுவதாகவும் ஜூன் மாதத்திற்குப் பிறகு இது மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், பொருளியல் சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சுமார் 26 மில்லியன் அமெரிக்கர்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை எனவும் உணவு வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகவும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பெரும்பாலான அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் மில்லியன் கணக்கானவர்களின் சிரமம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குளிர்சாதன வசதியுடைய டிரக்குகள் தற்காலிக மார்ச்சுவரிகளாகச் செயல்படுகின்றன.
சுகாதாரப் பராமரிப்புத் துறை அதிகாரிகளும் பணியாளர்களும் மிகுந்த உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
மருத்துவமனைகளில் அதிகமானோர் அனுமதிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் அவர்கள் நீண்ட நேரத்துக்குப் பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது.
அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் பல தாதியர் வேலையிலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அதிகரிக்கும் கிருமித்தொற்று நிலவரம் அச்சமளிப்பதாக இருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

