சிங்கப்பூர்- சீனா இருதரப்பு ஒத்துழைப்பு மன்றத்தின் 16வது கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய துணைப் பிரதமர், பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட ஆக உயரிய இருதரப்புத் தளமாக இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.
சிங்கப்பூ ரும் சீனாவும் பொதுச் சுகாதாரம் போன்ற பல புதிய துறைகளில் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட்டு வருவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் இணைப்புக் கட்டமைப்பை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் வழிகளை இவ்விரு நாடுகளும் உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங்கும் சீன துணைப் பிரதமர் ஹான் ஸெங்கும் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர். சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுப்புறம் போன்ற துறைகளில் 10 உடன்பாடுகளும் புரிந்துணர்வு குறிப்புகளும் நேற்று கையெழுத்திடப்பட்டன.
சீனாவின் கடல், தரைவழி செயல்திட்டம், பொருளியல் ஒத்துழைப்பு, வர்த்தகம், புத்தாக்கம், நிதி ஒத்துழைப்பு, பொது சுகாதார ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கும் இடையில் பரஸ்பர வருகை பரிமாற்றங்கள், பொருளியல் வளர்ச்சியுடன் இயற்கை வளங்களையும் கட்டிக்காத்து மேம்படுவது ஆகியவற்றில் இடம்பெறக்கூடிய இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மறுபரிசீலனை செய்ததாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை நேற்று குறிப்பிட்டது.
'சீனா-சிங்கப்பூர் குவாங்சு அறிவுப் பெட்டக நகர்' என்ற திட்டம் பற்றியும் இருதரப்பு தலைவர்களும் விவாதித்தனர். இத்திட்டம் இரு நாடுகளின் அரசாங்க நிலையில் இடம்பெறக்கூடிய இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டமாகும்.
கொவிட்-19க்குப் பிந்தைய உலகில் இணைப்புக் கட்டமைப்பு, மின்னிலக்கமயம், பொருளியல் வளத்துடன் இயற்கை வளங்களையும் கட்டிக்காப்பது ஆகிய துறைகள் இரு நாடுகளும் ஒத்துழைக்க மிக முக்கிய துறைகள் என்றாரவர்.
சிங்கப்பூரின் தொடர்பு தகவல் அமைச்சும் சீனாவின் ஷென்சென் மாநகராட்சி அரசாங்கமும் சென்ற ஆண்டு 'சிங்கப்பூர்-சீனா அறிவார்ந்த நகர் திட்டம்' என்ற ஒரு திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன. இது பற்றி நேற்றைய கூட்டத்தில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானதற்குப் பிறகு மின்னிலக்க வர்த்தகம், எல்லை கடந்த கணினித் தகவல் ஆளுமை, புத்தாக்கம், தொழில்முனைப்பு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் சாதிக்கப்பட்டுள்ளதாக திரு ஈஸ்வரன் கூறினார்.
கொவிட்-19 சூழலில் குறுகியகால விமானப் பயண ஏற்பாடுகள், விமானச் சேவைகளை அதிகரிப்பது, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வழமை நிலைக்குக் கொண்டு வருவது முதலானவற்றைப் பொருத்தமான காலத்தில் எப்படி சாதிக்கலாம் என்பது பற்றி சிங்கப்பூரும் சீனாவும் விவாதிக்கும் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
இருதரப்பு மக்களின் சுகாதாரப் பாது காப்புக்கு, பொதுச் சுகாதாரத் துறையில் இரு நாடுகளும் அணுக்கமாகப் பாடுபட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது முக்கியமானது என்று நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

