சிங்கப்பூரில் உள்ள நான்கு தன்னாட்சி பல்கலைக்கழகங்களின் விடுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை ஒரு முறை இலவசமாக அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (SMU), சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (SUTD) ஆகியவற்றைச் சேர்ந்த விடுதிவாசிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது.
அதிகமானோர் வசிக்கக்கூடிய இந்த இடங்களில் கிருமித்தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட கல்வி அமைச்சு, பரிசோதனை செய்துகொள்ளும்படி மாணவர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
மற்ற பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனவும் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள், தேவை ஏற்படும்போது அது பற்றி கருதும் என்றும் கல்வி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
விரைவு ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், கொரோனா இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என NTU, SMU மாணவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பரிசோதனையை தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகக் குழுக்களுக்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் அங்கம் இது என கல்வி அமைச்சு தெரிவித்தது.