பிரத்தியேக இடங்களில் 14 நாள்கள் தங்கியிருக்க வேண்டும்
கடைசி இரு வாரங்களாகத் தென்கொரியாவில் இருந்தபின் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவரும் பிரத்தியேக இடங்களில் 14 நாள்களைக் கழிக்கும் வகையில், அவர்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இந்தப் புதிய நடவடிக்கை நாளை இரவு 11.59 மணியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
சிங்கப்பூர்-தென்கொரியா இருதரப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் தென்கொரியா சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்புவோர்க்கும் இப்புதிய விதி பொருந்தும். சமூகத்தில் கொரோனா தொற்றும் அபாயம் காரணமாக அத்தகைய பயணிகளும் இந்தப் புதிய விதிக்கு உட்பட்டாக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 2ஆம் தேதி, தென்கொரியாவில் இருந்து வரும் பயணிகள் 14 நாள்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான உத்தரவை தங்களது வசிப்பிடங்களில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டனர்.
ஹாங்காங், இலங்கை, ஃபிஜி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் பிரத்தியேக இடங்களுக்குப் பதிலாக தங்களது வசிப்பிடங்களிலேயே 14 நாள்கள் தங்கியிருப்பதற்கான உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்கும்படி விண்ணப்பிக்கலாம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இருப்பினும், அவர்கள் சிங்கப்பூரில் நுழைவதற்குமுன் கடைசி 14 நாள்களை ஆஸ்திரேலியா, புருணை, மக்காவ், சீனா, நியூசிலாந்து, தைவான், வியட்னாம் போன்ற நாடுகளில் கழித்திருக்கக்கூடாது என்பதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
அத்துடன், தங்களது வசிப்பிடங்களில் தங்களைத் தவிர வேறு எவரும் தங்கியிருக்கக்கூடாது எனும் நிபந்தனையையும் அவர்கள் பூர்த்தி செய்யவேண்டியது அவசியம்.
வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய காலம் நிறைவுறுவதற்குமுன் அவர்களிடம் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
"உலகில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலமாகவும் சமூகத்திலும் அந்நோய்த்தொற்று பரவும் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் எல்லைக் கட்டுப்பாடுகளில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். எல்லை சார்ந்த நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏதேனும் செய்யப்பட்டால் அது குறித்து 'சேஃப்டிராவல்' இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்படும்," என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரில் நுழையுமுன், எல்லை சார்ந்த அண்மைய நடவடிக்கைகளுக்கு அந்த இணையத்தளத்தைப் பார்க்கும்படியும் சிங்கப்பூர் வந்த பிறகு, பிரத்தியேக இடங்களில் தங்குவதற்கான கட்டணம், பரிசோதனை, சிகிச்சை போன்ற நடவடிக்கைகளுக்கு உட்படத் தயாராக இருக்குமாறும் பயணிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சரியான பயண விவரங்களைக் குறிப்பிட வேண்டும் எனப் பயணிகளுக்கு நினைவூட்டிய அமைச்சு, தவறான தகவல்களை வழங்குவோர் மீது கடும் அமலாக்க நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொண்டு வரும் தென்கொரியாவில் ஏறத்தாழ 16 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடும் வகையில் ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி பெற ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்று அந்நாட்டின் பிரதமர் சுங் சை கியுன் தெரிவித்துள்ளார்.

