வடக்கில் செம்பவாங்கில் இருந்து மேற்கில் கிளமெண்டி, கிழக்கில் பிடோக், தெம்பனிஸ், பாசிர் ரிஸ் என தீவெங்கும் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் மக்கள் சொந்தமாக வண்ண விளக்குகள், சரிகைத் தோரணங்கள் எனப் பலவித அலங்காரங்களைச் செய்து, இன்றைய கிறிஸ்மஸ் பண்டிகையை வித்தியாசமாகக் கொண்டாடத் தயாராக இருக்கின்றனர்.
கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பிரம்மாண்டமாக கொண்டாட முடியாத சூழலில், குடியிருப்பாளர்கள் பலரும் கைகோத்து, கிறிஸ்மஸ் அலங்காரங்களைச் செய்துள்ளனர்.
பிடோக் ரெசர்வோர் சாலை, புளோக் 702க்கு முன்பாக 3.5 மீட்டர் உயர கிறிஸ்மஸ் மரம், தெம்பனிசில் அட்டைப் பெட்டிகளையும் 'ஸ்டைரோஃபோம்' கலன்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய தேவாலயம் என குடியிருப்பாளர்கள் ஆர்வத்துடன் அலங்கார வேலைகளில் பங்குகொண்டு, கொண்டாட்ட உணர்வு குன்றாமல் பார்த்துக்கொண்டனர்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 72, புளோக் 722ல் இம்முறை ஒற்றை ஆளாக கிறிஸ்மஸ் அலங்காரங்களைச் செய்துள்ளார் திரு லிம் பெங் ஹுவாட். முந்தைய ஆண்டுகளில் அவர் சிறிய அளவில் ஒளியூட்டு விழாவிற்கும் ஏற்பாடு செய்து, அண்டைவீட்டாரைக் கொண்டாட்ட உணர்வில் திளைக்க வைத்தார்.
செம்பவாங் வட்டாரத்தில், வியட்னாமைச் சேர்ந்தவரும் இல்லத்தரசியுமான லூ தி மை உயன், 43, தலைமையில் பத்துப் பேர் கொண்ட குழு, உலோகச் சட்டங்களையும் பசுமைநிற வலைகளையும் கொண்டு கேன்பரா ஸ்திரீட் புளோக் 121ல் மூன்று மீட்டர் உயரத்திற்கு கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கியுள்ளனர்.

