அனைத்து சுகாதார பராமரிப்பு சேவைகளையும் இம்மாதம் 19ஆம் தேதி முதல் நிறுத்தும்படி கான்கார்டு அனைத்துலக மருத்துவமனைக்குத் தற்காலிகமாக உத்தரவிடப்பட்டிருந்தது.
டிசம்பர் 14ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே நடத்தப்பட்ட சோதனைகளின் மூலமாக அந்த மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகச் சட்டத்தின்படி நடக்கத் தவறியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்தச் சட்டத்திற்கு உடன்படத் தவறும் மருத்துவமனைகளுக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது இரண்டு தண்டனைகளுமே விதிக்கப்படலாம்.
"உயிர்காப்பு கருவிகள், மருந்துகள் போன்றவை மருத்துவமனையின் முக்கியமான பகுதிகளில் (தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக் கூடம் முதலியன) பராமரிக்கப்படவில்லை. அத்துடன், ஆய்வுக்கூடம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு முறைகளில் தரநிலைக் கட்டுப்பாடு குறைவாக உள்ளன," என்று அமைச்சு தெரிவித்தது.
இவ்வாண்டு மார்ச் மாதத்தின்போது உடல்நிலை நலமாக ஆனால் கொவிட்-19 கிருமித்தொற்று உள்ள நோயாளிகளைப் பராமரிக்க சுகாதார அமைச்சு உதவி நாடிய மருத்துவமனைகளில் கான்கார்டு மருத்துவமனையும் ஒன்று.

