ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை இல்லாத வகையில் எல்லை தாண்டிய தடுப்பூசித் திட்டத்தை நேற்று தொடங்கியது. கொவிட்-19 தொற்றுக்கு முடிவுகட்டும் ஒரு முயற்சியாக ஒன்றிய நாடுகள் இந்நடவடிக்கையை தொடங்கியுள்ளன. ஏறத்தாழ 450 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பா, பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இரண்டு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்தை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அடுத்த ஆண்டில் எல்லா பெரியவர்களுக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க ஒன்றியம் இலக்கு கொண்டுள்ளது.
தடுப்பூசி போடுவதைப் பரவலாக்கும் நோக்கில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் வந்து உதவ ஒன்றியத்தின் சில நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. அதே சமயம் ஊசி போடுவோர் தொடர்பிலான கட்டுப்பாடுகளை சில நாடுகள் தளர்த்தி உள்ளன. ஆயினும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் மக்களிடையே பெரும் தயக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. அதனால் பிரான்ஸ் தொடங்கி போலந்து வரை ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளின் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
"சிரமத்தைக் கொடுத்து வந்த ஆண்டை நாம் கடக்கவுள்ளோம். கொள்ளைநோயில் இருந்து விடுபட தடுப்பூசிப் போட்டுக்கொள்வதே சிறந்தது. புதிய ஆண்டில் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்," என்று பிரசல்ஸைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் குமாரி உர்சுலா வோன் டெல் லெயென் தமது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒத்துழைப்பின்மையால் 2020 தொடக்கத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவை தவறிவிட்டதாகக் குறைகூறல் எழுந்தது. அதுபோன்ற புகாரைத் தவிர்க்கும் நோக்கில் தடுப்பூசி போடுவதில் ஒன்றிய நாடுகள் ஓர் அணியாகத் திரண்டு ஒன்றோடு ஒன்று ஒத்துழைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

