எட்டுப் பேர் வரையிலும் குழுவாகச் சேர்ந்து உண்ணலாம் என்றபோதும் மூன்றாம் கட்டத் தளர்வுகள் நடைமுறைக்கு வந்த முதல் நாளான நேற்று அப்படி ஒரு சில குழுக்களே தென்பட்டன.
பீஷானில் உள்ள ஜங்ஷன் 8, போன விஸ்தாவில் உள்ள ஸ்டார் விஸ்தா, ஆர்ச்சர்ட் சாலையில் உள்ளவை என பல கடைத்தொகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றியதையும் 'சேஃப்என்ட்ரி' முறையில் தங்களின் வருகையைப் பதிவுசெய்ததையும் காண முடிந்தது.
அதேபோல, கிம் மோ, தோ பாயோ ஆகிய பகுதிகளில் உள்ள உணவங்காடி நிலையங்களிலும் சிறிய அளவிலான குழுக்களாகவே சேர்ந்து உண்டனர்.
மூன்றாம் கட்டத் தளர்வுகளின்கீழ், அதிகபட்சம் ஐவர் என்றிருந்த ஒன்றுகூடுவோர் வரம்பு எட்டுப் பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான குழுக்களில் ஐவருக்கு மிகவில்லை என்றபோதும், ஆறு, ஏழு அல்லது எட்டுப் பேர் கொண்ட குழுவாக வந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
யுனோயா தொடக்கக் கல்லூரி மாணவரான ஜோயல் கோ, 17, தம் நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து ஜங்ஷன் 8ல் உள்ள ஓர் உணவகத்திற்கு நேற்று வந்திருந்தார்.
"நண்பர் கூட்டத்தில் ஐவருக்கு மேல் இருந்தால் இரு பிரிவுகளாகப் பிரிந்து உண்ண வேண்டி இருந்தது. இப்போது, எல்லாரும் சேர்ந்து உண்ண முடிவது மகிழ்ச்சி தருகிறது," என்றார் ஜோயல்.
இதனிடையே, ஓர் உணவு மேசையில் எட்டு அல்லது அதற்கும் குறைவான இருக்கைகள் இருந்தால் அவ்விருக்கைகளில் 'அமரக்கூடாது' என்பதைக் குறிக்கும் குறியீடுகள் இருக்காது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்து உள்ளது.
அதே நேரத்தில், உணவங்காடி நிலையங்களில் இரு வேறு குழுக்களுக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் ஒரு மீட்டருக்குக் குறைவான இடைவெளியுடன் இரு மேசைகள் இருந்தால் சில இருக்கைகள் 'அமரக்கூடாது' என்பதற்கான குறியீட்டுடன் இருக்கும் என்றும் வாரியம் கூறியுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கி நடப்பதை உறுதிப்படுத்த உணவங்காடி நிலையங்களில் பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் வாரியம் தெரிவித்து இருக்கிறது.

