சமூகத்தில் பதிவாகும் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் குறைவாக இருந்தாலும் சிங்கப்பூரர்கள் கிருமிக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
அடுத்த கிருமிப் பரவல் என்பது வெகு தூரத்தில் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பு மேம்படும். அத்துடன் முடிந்தவரை துரிதமாக அதன் சமூக, பொருளியல் நடவடிக்கைகளை சிங்கப்பூர் படிப்படியாக இயல்புநிலைக்குக் கொண்டுவர முடியும் என்று அவர் நேற்று கூறினார்.
மேலும், நாட்டின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு நெருக்குதல் ஏற்படாமல் தடுப்பூசி பாதுகாக்கும். சிங்கப்பூரின் பயணப் பாதைகள் மறுபடியும் திறப்பதற்கான வழியையும் தடுப்பூசித் திட்டம் உருவாக்கிடும். எனவே, வாய்ப்பு வந்ததும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மக்களுக்கு அமைச்சர் கான் அறிவுறுத்தினார்.
'ஃபைசர்-பயோஎன்டெக்' தடுப்பூசிகளுடன் நேற்று தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. நிலையத்தைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அங்கு வருகையளித்த அமைச்சர் கான், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியிருந்தார்.
"எல்லைக் கட்டுப்பாடுகளால் அனைத்துலகப் பயணங்கள் நின்றுபோய் விட்டன. தடுப்பூசித் திட்டம்வழி இத்தகைய நின்றுபோன பயணப் பாதைகள் பல மீண்டும் தொடரும் வாய்ப்பு ஏற்படும்," என்றார் அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் தலைவராக உள்ள திரு கான்.
தடுப்பூசியின் ஆற்றல் குறித்துக் கேட்கப்பட்டபோது, அது உலக சுகாதார நிறுவனம், சுகாதார அறிவியல் ஆணையம், இதர கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருப்பதாக திரு கான் தெரிவித்தார்.
இருப்பினும் தடுப்பூசி உருவாக்கப்பட்டு சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அதன் நீண்டகால பாதிப்புகள் அறிய முடியவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
பிரதமர் லீ சியன் லூங் உட்பட தாமும் அமைச்சரவை உறுப்பினர்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்று தெரிவித்த திரு கான், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அட்டவணை திட்டமிடப்பட்டு வருவதாகச் சொன்னார்.
"எனது முறை வரும்போது, தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வருவோரில் நானும் ஒருவராக இருப்பேன்," என்றார். வரும் வாரங்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
தடுப்பூசியை 70 வயது, மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் உள்ள சிங்கப்பூர்வாசிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போட்டுக்கொள்ளலாம். அதையடுத்து மருத்துவ ரீதியாகத் தகுதிபெறும் மற்ற சிங்கப்பூரர்களும் நீண்டகால சிங்கப்பூர்வாசிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

