கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்தாகி விட்டது. மலேசியா தெரி வித்து இருந்த மாற்றங்கள் தொடர்பில் 2020 டிசம்பர் 31க்குள் உடன் பாடு ஏற்பட வில்லை. இதன் காரணமாக அந்தத் திட்டம் முடித்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் கூட்டு அறிக்கை ஒன்றில் நேற்று இதனை அறிவித்தனர். கொவிட்-19 காரணமாக மலேசியப் பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இந்த அதிவேக ரயில் திட்டத்தில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது என்று மலேசிய அரசாங்கம் குறிப்பிட்டு இருந்தது என்பதை அந்தக் கூட்டறிக்கைச் சுட்டியது.
அந்த மாற்றங்கள் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை இரண்டு அரசாங்கங்களும் நடத்தி வந்தன. ஆனால் உடன்பாட்டை எட்ட முடியவில்லை.ஆகையால் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்ட உடன்பாடு 2020 டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இதனையடுத்து இரு நாடுகளும் தங்களுக்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்ட இரு தரப்பு இணக்கம் முடிவுக்கு வர மலேசியா அனுமதித்துவிட்டது என்றும் இந்தத் திட்ட இணக்கத்திற்கேற்ப சிங்கப்பூர் ஏற்கெனவே செலவிட்டு உள்ள தொகையை மலேசியா ஈடுசெய்ய வேண்டி இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. அதிவேக ரயில் திட்டம் ரத்தாகி இருந்தாலும் இரு நாடுகளும் தொடர்ந்து நல்லுறவை நிலைநாட்டி வரவும் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட தொடர்புகளைப் பலப்படுத்துவது உள்ளிட்ட பல துறைகளில் அணுக்கமாக ஒத்துழைக்கவும் உறுதிபூண்டு இருப்பதாகக் கூட்டறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு மலேசியா கொடுக்க வேண்டி இருக்கின்ற இழப்பீட்டுத் தொகை பற்றிய விவரங்கள் நேற்றைய கூட்டறிக்கையில் இடம்பெறவில்லை. இருந்தாலும் 2018 ஜூலையில் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சராக இருந்த கோ பூன் வான், நாடாளுமன்றத்தில் இது பற்றி தெரிவித்து இருந்தார்.
இந்த ரயில் திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூர் 2018 மே மாத முடிவு வாக்கில் $250 மில்லியனுக்கும் அதிகத் தொகையைச் செலவிட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார்.சிங்கப்பூர் செலவிடும் தொகை இன்னும் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையில் அந்த 350 கி.மீ. அதிவேக ரயில் திட்டத்தை அமைக்க இரு தரப்புகளும் 2013ல் இணங்கின. அந்த ரயில், கோலாலம்பூர் நகர் பகுதியில் உள்ள பண்டார் மலேசியாவில் அமையும் ஒரு முனையத்தில் இருந்து சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட்டில் கட்டப்படும் ஒரு முனையம் வரை சேவையாற்றவிருந்தது.
அதிவேக ரயில் வழித்தடத்தில் ஏழு ரயில் நிலையங்கள் அமைந்திருக்கும். கோலாலம்பூர்-சிங்கப்பூர் பயண நேரம் 90 நிமிடமாகக் குறைந்துவிடும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்தத் திட்டம் தொடர்பான சட்டபூர்வ அம்சங்கள் உள்ளடங்கிய உடன்பாடு 2016 டிசம்பரில் பிரதமர் லீ சியன் லூங், அப்போது மலேசியப் பிரதமராக இருந்த நஜிப் ரசாக் இருவர் முன்னிலையில் கையெழுத்தானது.
சிங்கப்பூர் திட்டப் பணிகளைத் தொடங்கியது. ஆனால் மலேசியாவில் 2018 மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கம் மாறியதை அடுத்து புதிய அரசின் வேண்டுகோளின் பேரில் அதிவேக ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடக்கமாக, இந்தத் திட்டம் இரண்டாண்டு காலத்திற்கு நீட்டிக்கப்படும் என 2018 செப்டம்பரில் முடிவானது. அது 2020 மே மாதம் முடிவடைந்தது. பிறகு டிசம்பர் 31 வரை கடைசியாக காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து இப்போது திட்டம் ரத்தாகிவிட்டது.

