பொதுமக்களும் காணும் வகையில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முதல் முறையாக நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிய மொழியிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும் அவை தொடர்பு, தகவல் அமைச்சின் யூடியூப் ஒளிவழி வாயிலாக ஒளிபரப்பப்பட்டன.
எம்.பி.க்களின் அனைத்து உரைகளும் விவாதங்களும் காணொளிகளாகப் பதிவு செய்யப்பட்டு, சில மணி நேரங்களுக்குள் அவை பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சு முன்னதாக ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த எழுத்துபூர்வ பதிவுகளைப் பார்க்கும் தெரிவும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து இருந்தது.

