கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் $17.4 பில்லியன் அரசு ஆதரவுடன் கூடிய கடனைப் பெற்றுள்ளன.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் மேற்பார்வையிடும் பல்வேறு திட்டங்கள் மூலமாக 20,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அந்த அளவுக்குக் கடன் கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் நிறுவனங்கள், சென்ற ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை பெற்ற கடன் அளவு, 2019 ஆம் ஆண்டு முழுவதற்கும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆதரவு பெற்ற கடனைப்போல் 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 காரணமாக நிறுவனங்களுக்குப் பல பாதிப்புகள் ஏற்பட்டன. பணப் புழக்கம் இன்றி அவை சிரமத்தை எதிர்நோக்கின.
இத்தகைய ஒரு காலத்தில் அவற்றுக்கு உதவுவதற்காக தற்காலிக கடன் செயல்திட்டம் போன்ற பல திட்டங்கள் நடப்புக்குக் கொண்டு வரப்பட்டன.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 விழுக்காட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் மொத்த வர்த்தகத் துறை, இந்தக் கடன் திட்டங்களால் அதிக பலன் அடைந்த துறைகளில் ஒன்று என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக இந்தத் துறைக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு கொஞ்ச காலத்துக்குத்தான் என்றும் நீண்ட காலப்போக்கில் இந்தத் துறைக்கு வளர்ச்சி வாய்ப்பகள் நன்றாக இருக்கும் என்று சிங்கப்பூர் தொடர்ந்து நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொத்த வர்த்தகத் துறையில் 50,000க்கும் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு இருக்கின்றன.
சிங்கப்பூர் ஊழியர் அணியில் 100 பேருக்கு 9 பேர் அல்லது 32,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள்.
அமைச்சர் திரு சான், நேற்று எரிபொருள், உராய்வுக் குறைப்பு எண்ணெய் ஆகியவற்றை விநியோகிக்கும் 'பிஎஸ் எனர்ஜி' என்ற மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சென்றார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மொத்த வர்த்தகத் துறைக்கு வரும் ஆண்டுகளில் மூன்று அம்சங்கள் உருவம் கொடுக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.
பொருட்கள், சேவைகள் விநி யோகிக்கப்படுகின்ற அமைப்பு முறையிலும் வர்த்தகப் போக்குகளிலும் ஏற்படும் மாற்றம்; வழிவழியான ஆதாய வர்த்தகத்தில் மின்னிலக்கத் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் அதிக வெளிப்படைத்தன்மை; செயல்முறைகளில் அதிக மீள்திறன், நம்பகத்தன்மை, ஆற்றல் ஆகியவற்றுக்கான வேட்கை ஆகியவை அந்த மூன்று அம்சங்கள் என்றார் திரு சான்.
கடன்களைக் கொடுப்பதுடன் நின்றுவிடாமல் இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மின்னிலக்க தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வது போன்ற புதிய ஆற்றல்களைப் பலப்படுத்தி மேம்படவும் அரசாங்கம் உதவி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

